Monday, July 30, 2007

மாமதுரை வாசம், மல்லிகைப்பூ வாசம்!

எல்லாருக்குமே பிறந்த ஊர்ப் பாசம் கட்டாயம் இருக்கும். ஆனால் என் குழந்தைகளைப் பொறுத்த வரை அவங்க "யாதும் ஊரே யாவரும் கேளிர்!" வகைதான். ஏனென்றால் ஒரு குறிப்பிட்ட ஊரில் இருந்ததோ, படித்ததோ கிடையாது. என்ன ஊர்னு சொல்லுவோம்னு பையன் கேட்பான்! கும்பகோணம் அப்பா பக்கம்னாலும் அங்கே இருந்தது கிடையாது, அம்மா ஊர் மதுரைனாலும் அங்கே பிறந்ததோடு சரி! எப்போவாவது ஊர்ப்பக்கம் ஏதாவது உறவினர் வீட்டுத் திருமண நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள என்னோடு வருவதோடு சரி. அதனாலோ என்னவோ அவங்களால் எல்லா இடத்திலும் பொருந்திக் கொள்ள முடிகிறதோ என்னமோ! ஆனால் என்னால் எங்கேயும் அப்படிப்பொருந்திக் கொள்ள முடிவதில்லை. இத்தனைக்கும் திருமணத்துக்குப் பின்னர் மதுரைக்கு இரண்டு பிரசவத்துக்கும் போனதோடு சரி, அங்கே தங்கியது எல்லாம் அப்புறம் சில நாட்கள் கணக்குத் தான். இப்போ 2005-ல் ஒருமுறை மதுரை போனோம். அப்புறம் போகவே முடியவில்லை. என்றாலும் என் எழுத்தில் அதன் தாக்கம் கொஞ்சம் அதிகமாவே இருக்கும். காரணம் என்னால் ஊரை மறக்க முடியவில்லை. "ராயல்" மாதிரி நான் மாதம் 2 முறை போவதில்லை. தருமி மாதிரி அங்கேயே வாழவில்லை. என்றாலும் பிறந்து, வளர்ந்து, படிச்சு, கல்யாணம் செய்துகொள்ளும் வரை வாழ்ந்த ஊர். ஒவ்வொரு தெருவுக்கும் போகும்போது ஒவ்வொரு நிகழ்ச்சி நினைவுக்கு வரும்.

என் பையன், பெண், கணவர் மூன்று பேருமே இந்த விஷயத்தில் என்னைக் கேலி செய்வார்கள். மதுரைன்னு சொல்லி முடிக்கக் கூட வேண்டாம். "ம"னு ஆரம்பிக்கும் முன்னேயே அம்மா அவங்களைச் சொந்தம் கொண்டாட ஆரம்பிச்சுடுவான்னு சொல்லிட்டு இருப்பாங்க. என்னன்னு தெரியாத ஒரு பாசம் அந்த ஊர் மேல் எனக்கு. நான் அறிந்த மதுரை பத்தி எழுதச் சொல்லி "தருமி" சொல்லி இருக்கார். எங்கே ஆரம்பிக்கிறதுன்னு புரியலை. இருந்தாலும் ஏதாவது எழுதணும்னும் இருக்கு. கொஞ்சம்கொஞ்சமாக நினைவில் வைத்திருப்பவற்றைப் பகிர்ந்து கொள்கிறேன். முதலில் "ராயல்" கேட்கும்போது, மாட்டேன் என்றே சொல்லத் தோணலை. ஊர்ப் பாசம் அப்படி இழுத்துட்டு வந்து சேர்த்து விட்டது. நாங்க முதலில் நான் சின்னப் பெண்ணாக இருந்தப்போ இருந்த வீடு இருந்தது எல்லாம் திண்டுக்கல் ரோடில் இருந்து பிரியும் "மேலப் பாண்டியன் அகழித் தெரு"வில் என்று அம்மா சொல்லுவாங்க. அதை அப்போது "கழுதை அக்கிரஹாரம்" என்றும் சொல்லுவார்களாம். தற்சமயம் என்ன பெயரில் இருக்கிறதுன்னு தெரியலை. அந்த வீட்டில் இருக்கும்போதுதான் என்னோட 4-வது வயசிலெ நான் பள்ளியில் முதல் வகுப்பில் சேர்ந்தேன் என்று மட்டும் அரைகுறை நினைவு இருக்கிறது.

3 Comments:

தருமி said...

மல்லிப்பூ வாசத்தோடு வந்திருக்கீங்க.. வாங்க.. நிறைய சொல்லுங்க; கேட்க காத்திருக்கிறோம்.

குமரன் (Kumaran) said...

கீதாம்மா. எனக்கு கழுதை அக்கிரஹாரம் நல்லாவே தெரியுமே. மாடர்ன் ரெஸ்டாரெண்ட் பக்கத்துல கிளம்பி தெற்கு மாசி வீதியில வந்து முடியுமே அந்தத் தெருவைத் தானே சொல்றீங்க? அந்தத் தெருவுல தான் எனக்கு +2வுல கெமிஸ்ட்ரி சொல்லிக் கொடுத்த வாத்தியார் வீடு இருக்கு. மாடர்ன் ரெஸ்டாரெண்ட் பார்சல் வாங்க வீட்டுல இருந்த அந்த வழியாத் தான் சின்ன வயசுல போறது. எப்பவாவது கான்சாமேட்டுத் தெரு வழியா போறதும் உண்டு.

மெளலி (மதுரையம்பதி) said...

ஆகா, இப்பத்தான் இதப்படித்தேன்....

அப்படியே ஒரு சுத்து மதுரை தெருக்கள்ள நடந்த அனுபவம்...நன்றி கீதாம்மா.