Saturday, April 11, 2009

மலையத்துவஜன் பெற்ற பெருவாழ்வு!-மதுரை அரசாளும் மீனாட்சி!

பஞ்ச சபைகளிலும் உள்ள நடராஜ மூர்த்தங்களில் மதுரை கால்மாறி ஆடிய நடராஜ மூர்த்தமே பெரிய மூர்த்தம் ஆவார். சிதம்பரம், திருவாலங்காடு, திருநெல்வேலி ஆகிய தலங்களில் சிறிய பஞ்சலோக வடிவிலேயே காணலாம். குற்றாலத்தில் ஓவியமாய்க் காட்சி அளிப்பார். அதுவும் இன்று அழியும் நிலையில் காணப் படுகின்றது. இங்கே மட்டுமே சிலா விக்ரஹமாய்ப் பெரிய வடிவில் காண முடியும். பத்துக் கரங்களுடனே ஆயுதங்கள் ஏந்திக் காட்சி தருகின்றார். உற்சவ நடராஜர் தையாக இருப்பார். சபையை சமீபத்திலே தான் வெள்ளியால் அலங்கரித்தனர். தனிவாசல் எப்போதும் உண்டு. சிவகாமி உடன் இருக்கின்றாள். பதஞ்சலி முனிவரும், வியாக்ரபாதரும் வணங்கியபடி இருக்கின்றார்கள். இந்த நடராஜர் சந்நிதிக்கு எதிரே நின்று கொண்டால் ஒரே நேரத்தில் உள்ளே மூலஸ்தானத்தில் உள்ள சுந்தரேஸ்வரரையும், நடராஜரையும் தரிசிக்க முடியும்.

இதற்கு முன்னர் நடந்த கும்பாபிஷேஹங்கள், ருத்ரோத்காரி ஆண்டு, ஆனிமாதம் 17-ம் தேதி புதன்கிழமை 1-7-1923-ம் ஆண்டிலும், அதன் பின்னர் பல வருஷங்கள் கழித்து, பெரும் முயற்சியின் பேரில் சோபகிருது ஆண்டு, ஆவணி மாதம் 12-ம் தேதி புதன்கிழமை 28-8-19663-ம் ஆண்டிலும், (இந்தக் கும்பாபிஷேஹம் மட்டும் தான் நான் பார்த்தது) அதன் பின்னர் ஆனந்த வருஷம், ஆனி மாதம் 12-ம் தேதி புதன்கிழமை 26-6-1974-ம் ஆண்டிலும், யுவ ஆண்டு, ஆனி மாதம் 23-ம் தேதி வெள்ளிக்கிழமை, 7-7-1995-ம் ஆண்டிலும் கும்பாபிஷேஹங்கள் நடைபெற்றன.

பதினேழாம் நூற்றாண்டில் திருமலை நாயக்கர் காலத்தில் கோயில் விரிவாக்கம் செய்யப் பட்டது. திருமலை நாயக்கர் வண்டியூரில் தெப்பம் கட்டும்போது தோண்டக் கிடைத்தவரே இங்கே இப்போது பிரதிஷ்டை செய்யப் பட்டிருக்கும் முக்குறுணி விநாயகர். இந்த விநாயகருக்கு ஒவ்வொரு விநாயக சதுர்த்தியின் போதும் மூன்று குறுணி அரிசியால் ஒரே மோதகம் செய்யப் பட்டு நிவேதனம் செய்து பக்தர்களுக்கு விநியோகம் செய்யப் படும். கூன்பாண்டியன் என்றழைக்கப் பட்ட சுந்தரபாண்டியன் காலத்தில், திருஞானசம்பந்தர் அருளால் பாண்டியன் சமணத்தில் இருந்து சைவத்துக்கு மாறினான். அப்போது மன்னன் கூனை நீக்கி நின்றசீர் நெடுமாறனாக்கிய திருஞான சம்பந்தர் மடப்பள்ளிச் சாம்பலை வைத்தே மன்னனின் பிணி தீர்த்ததால்,கோயில் மடப்பள்ளி சாம்பல் அம்மன் சந்நிதிக்கு முன்னும், சொக்கநாதர் என்றழைக்கப் படும் சுந்தரேசன் சந்நிதி போகும் வழியிலும் வைக்கப் பட்டு அனைத்து பக்தர்களாலும் அணியப் படும். இது தவிரவும் தன் பக்தன் ஆன பாணபத்திரன் என்பவனுக்காக இசை வாதில் இறைவனே நேரில் வந்து உதவிய திருவிளையாடலும், மேலும் பாணபத்திரனுக்குப் பொருளுதவி செய்யவேண்டி, ஈசனே சேரமான் பெருமாள் நாயனாருக்குப் பதிகம் எழுதிக் கொடுத்துப் பொன்னும் பொருளும் பெற உதவினார். ஏழை அந்தணன் ஆன தருமிக்காகப் பாட்டு எழுதிக் கொடுத்ததும், ஈசனே ஆனாலும், பாட்டில் பொருட்குற்றம் கண்டு பிடித்து, "நெற்றிக் கண்ணைத் திறப்பினும் குற்றம், குற்றமே!" என நக்கீரர் என்னும் புலவரைச் சொல்ல வைத்துத் தமிழுக்குப் பெருமை சேர்த்ததும் இங்கேயே தான்.

சதா என்றால் எப்போது என்ற பொருள் தோன்றும். சதா சிவம் எப்போதும், எங்கேயும் எங்கே பார்த்தாலும் சிவமே. எதைக் கேட்டாலும் சிவமே. அத்தகைய சதாசிவத்தின் சிலை, சிவசிவ என்னும் மந்திர ஒலியின் அடிப்படையில் உருவாக்கப் பட்ட சிலை, இங்கே உள்ள அம்மன் கோபுரத்தில் உள்ள சதாசிவம் சிலை. ஏழு நிலைகள் கொண்ட அம்மன் கோபுரத்தின் அம்மன் சந்நிதிக்குச் செல்லும் வழியில் இந்த கோபுரத்தில் இந்தச் சிலை காணக் கிடைக்கும். அம்மை தன் அருளைக் காட்டிய அற்புதங்கள் பல இங்கே நிகழ்ந்திருக்கின்றன. திருச்செந்தூர் ஷண்முகனின் அருளால் பேசும் திறமை பெற்ற குமரகுருபரர், காசிக்குச் செல்லும் வழியில் மதுரை வந்தார். கோயிலுக்கு வந்து மீனாட்சியை வணங்கிய அவர் மீனாட்சியைச் சிறுபெண்ணாய்க் கண்டு, அவள் அழகிலும், கண்ணொளியிலும் மயங்கிப் போய் இத்தனை அழகா இந்தக் குழந்தை என வியந்து, பிள்ளைத் தமிழ் பாடி, அவளைச் சீராட்டிப் பாராட்டினார். அவர் மலயத்துவஜன் பெற்ற பெருவாழ்வாகிய அன்னையைப் பாடி அழைத்ததைக் கேட்ட அன்னை, ஒரு சிறு பெண்ணின் வடிவிலேயே வந்து பாடலைக் கேட்டுவிட்டுத் தன் கழுத்தில் இருந்த முத்து மாலையை எடுத்து அவருக்கு அணிவித்தாள். ஒரு சிலர் அப்போது அவையில் இருந்த மன்னனின் கழுத்தில் இருந்து முத்துமாலையைக் கழற்றி அணிவித்ததாயும் சொல்லுவார்கள். அம்மையைக் குறிப்பிட்டு குமரகுருபரர் பாடிய நிகழ்ச்சிகள் அம்மன் சன்னதியைச் சுற்றி உள்ள ப்ரஹாரச் சுவர்களில் சிற்பங்களாய் உள்ளன. குமரகுருபரருக்கு அன்னை குழந்தையாய் வந்து மாலை அணிவித்தது அம்மன் சந்நதிக்கு முன்னே உள்ள மண்டபத்தில் சித்திரமாய்த் தீட்டப் பட்டிருக்கும்.

கவிநயாவின் பதிவில் அன்னையில் கால் சிலம்பில் மாணிக்கமா, முத்தா என்ற பட்டி மன்றம் நடந்து கொண்டிருக்கிறது. அவள் கால் சிலம்பில் முத்தோ, மாணிக்கமோ? அவள் சிரித்தால் முத்துக்கள் தோற்கும். அவள் ஒளியில் மாணிக்கம் முன்னே நிற்க முடியாது. அவள் அருளில் இந்திரலோகத்துக் காமதேனுவையும், அமுதசுரபியையும் விட அதிகமாய்க் கிடைக்கும். அவள் கண்ணாட்சியால் கண்களை இமைக்காவண்ணம் இருந்து மீன் எப்படித் தன் குஞ்சுகளைக் காக்கின்றதோ அம்மாதிரி நம்மைக் காத்து வருகின்றாள். அதனாலேயே அவளுக்கு மீனாட்சி என்ற பெயர். ஈசனின் மனோன்மணியாக வாசம் செய்யும் இவள் சியாமளாவாக ஏற்கெனவேயே வாசம் செய்து கொண்டிருந்தாள். ஆகவே இவளுக்கு சியாமளா என்ற பெயரும் உண்டு. மனோன்மணி என்ற பெயரும் உண்டு. இந்தக் கோயிலில் பின்பற்றப் படும் ஆகமங்கள் காரண, காமிக ஆகமங்கள் ஆகும். திருமலை நாயக்கரின் அமைச்சர் ஆன நீலகண்ட தீட்சிதர் வகுத்துக் கொடுத்த முறைப்படி வழிபாடுகள் இன்றளவும் நடந்து வருகின்றன. எட்டுக்கால பூஜைகள் நடக்கின்றன. திரு அனந்தல், விளாபூஜை, காலசந்தி, திரிகால சந்தி, உச்சிக்காலம், சாயரட்சை, அர்த்தஜாமம், பள்ளியறை பூஜை என எட்டுக்காலங்களிலும் வழிபாடுகள் நடக்கின்றன. அரசியான இவளுக்கு முதல் மரியாதைகள் செய்து வழிபாடுகள் முடிந்தபின்னரே மாமனார் வீட்டு மாப்பிள்ளையான ஈசனுக்கு காலபூஜைகள் நடைபெறும். அதுபோல் பொது மக்களும் முதலில் மீனாட்சியைத் தரிசித்துவிட்டே சொக்கரைத் தரிசிப்பார்கள்.

2 Comments:

Geetha Sambasivam said...

யாருமே கமெண்டலை இன்னி வரைக்கும், என்ன செய்யறாங்க, இந்த மருதை மக்கள்ளாம்??? இ.கொ. மாதிரி இனிமே நானே கமெண்டிக்கணும் போல!

Anonymous said...

This your holy god born 1300 ( after Christ).
Her grandfather!!
முதலாம் மாறவர்மன் குலசேகர பாண்டியன் கி.பி 1268 முதல் கி.பி 1311 வரை அரசாண்ட பாண்டிய மன்னனாவான். முதலாம் சடையவர்மன் சுந்தர பாண்டியனை அடுத்து முடி சூடியவனான இவன் தன் இறப்பு வரை ஆட்சி புரிந்தான்.

When siva & Parvathy Weds??