மதுரை நகருக்குள்ளேயே பஞ்ச பூதத் தலங்களும் உள்ளன. அவை
மதுரை மீனாக்ஷி கோயில் ஆகாயத் தலம்
முக்தீஸ்வரர் கோயில்- வாயுத் தலம்
செல்லூர் திருவாப்புடையார் கோயில்-நீர்த்தலம்
இம்மையில் நன்மை தருவார் கோயில்-பூமித்தலம்
தென் திருவாலவாய் ஸ்வாமி கோயில்- அக்னித் தலம் ஆகியவை ஆகும்.
மதுரையின் தெருக்கள் பெயர்கள். கோபுர வாயில்களைக் கடந்து சென்றோமானால் உள்ளே வெளியில் இருக்கும் பிரஹாரம் ஆடி வீதி என்ற பெயரால் அழைக்கப் படுகின்றது. கீழ ஆடி வீதி, மேல ஆடி வீதி, தெற்காடி வீதி, வடக்காடி வீதி போன்றவை அவை. கோபுரங்களுக்கு வெளியே அவற்றைச் சுற்றி உள்ள வீதிகள் சித்திரை வீதி என்ற பெயரால் அழைக்கப் படுகின்றன. மேலச் சித்திரை வீதி, வடக்குச் சித்திரை வீதி, தெற்குச் சித்திரை வீதி, கீழச் சித்திரை வீதி போன்றவை. கோயிலில் வழிபாடுகள் செய்யும் அர்ச்சகர்களை மதுரையில் பட்டர்கள் என அழைக்கப் படுவார்கள். பெருமாள் கோயில் பட்டாசாரியார்கள் இல்லை இவர்கள். அதே போல் மற்ற சிவன் கோயில்களின் சிவாசாரியார்களும் இல்லை. இவர்களுக்கெனத் தனியாகக் கோயிலை ஒட்டியே வடக்கு கோபுர வாயிலுக்கு எதிரே இரு வீதிகள் உண்டு. மேலப் பட்டமார் தெரு, கீழப் பட்டமார் தெரு என்பவை அவை. சிலர் வடக்காவணி மூல வீதியிலும் வசித்தனர்.
சித்திரை வீதிகளை அடுத்து ஆவணி வீதி. அவையும் நான்கு திசைகளைக் குறிக்கும். அடுத்துத் தேரோட்டமும், முக்கியத் திருவிழாவான சித்திரைத் திருநாளில் ஸ்வாமி வீதி உலா வரும் வீதியுமான மாசி வீதிகள். இதைத் தவிர சில வீதிகளின் பெயர்கள்:
கருகப்பிலைக்காரச் சந்து,
தானப்ப முதலி அக்ரஹாரம்,
கோபால கொத்தன் தெரு,
லக்ஷ்மிநாராயணபுர அக்ரஹாரம்
வெங்கடுசாமி முதலியார் அக்ரஹாரம்
பச்சரிசிக்காரத் தெரு,
தென்னவோலக்காரத் தெரு,
சித்திரக்காரத் தெரு,
வளையல்காரத் தெரு
பூக்காரத் தெரு,
சுண்ணாம்புக்காரத் தெரு,
சாந்துக்காரத் தெரு
தலை விரிச்சான் சந்து
மேல கோபுர வாசல்,
கீழ கோபுர வாசல்,
சொக்கப்ப நாயக்கன் தெரு
கான்சாமேட்டுத் தெரு, (மருதநாயகம், கான் சாகிபாக மாறியதைக் குறிக்கும் கான் சாகிப் மேட்டுத் தெரு, தான் இது)
வடக்கு கிருஷ்ணன் கோயில் தெரு,
தெற்கு கிருஷ்ணன் கோயில் தெரு
வடம்போக்கித் தெரு
வெள்ளியம்பலம் தெரு
அன்னக்குழி மண்டபத் தெரு
தளவாய் அக்ரஹாரம்
பழைய சொக்கநாதர் கோயில் தெரு,
வக்கீல் புதுத்தெரு
குட்ஷெட் ரோடு
தமிழ்ச்சங்கம் ரோடு
ஆரப்பாளையம் ரோடு,
திருப்பரங்குன்றம் ரோடு
அழகர் கோயில் ரோடு
கோரிப்பாளையம்
நினைவில் வந்த தெருக்களின் பெயர்களை மட்டும் குறிப்பிட்டுள்ளேன். மற்றத் தெருக்காரங்கல்லாம் கோவிக்காதீங்கப்பா!
அடுத்து தேசபக்தியில் மதுரை மட்டமா என்ன?? இந்தியாவிலேயே முதல்முறையாக ஹரிஜன ஆலயப் பிரவேசம் மதுரையில் தான் நடந்தது. சுதந்திரப் போராட்டங்களும், போராட்டத்தில் கலந்து கொண்டவர்களும் மதுரையில் நிறையவே உண்டு. சுதந்திரப் போராட்டத்தின் முக்கியப் பங்காய் இடம் பெற்ற ஆலயப் பிரவேசம் நிகழ்வு மதுரையில் 1939-ம் ஆண்டு ஜூலை மாதம் 8-ம் நாள் முதல் முதல் திரு ஏ. வைத்தியநாத ஐயரால் நடைபெற்றது. அப்போதைய நிர்வாக அதிகாரி திரு ஆர்.எஸ். நாயுடு உதவி செய்ய, தன்னுடன் தும்பைப்பட்டி கக்கன்(காமராஜர் அமைச்சரவையில் போலீஸ் மந்திரியாக இருந்தார்), ஆலம்பட்டி முருகானந்தம், மதிச்சியம் சின்னையா, விராட்டிபத்து பூவலிங்கம், முத்து ஆகிய ஐவரும் அரிஜனர். ஆறாவது நபர் விருதுநகர் சண்முக நாடார் ஆகியோரை அழைத்துக் கொண்டு ஆலயப் பிரவேசம் நடத்தினார். எதிர்ப்புத் தெரிவித்தவர்கள் கோயிலை மூடினார்கள் என்றும், தமிழ்ச்சங்கம் ரோடில் புதிய கோயில் ஒன்றைக் கட்டி அங்கே சில நாட்கள் வழிபாடுகள் நடத்தினார்கள் என்றும் குறிப்புகள் தெரிவிக்கின்றன.
ஆனால் எட்டாம் தேதி இரவு மூடப் பட்ட கோயிலை பத்தாம் தேதி காலையில் மாஜிஸ்ட்ரேட் ஒருவர் முன்னிலையில் கோயிலின் நிர்வாக அதிகாரி ஆர்.எஸ்.நாயுடு திறந்தார். ஏராளமான ஜனங்கள் ஆலயப் பிரவேசம் நிகழ்த்தினர். மகாத்மா காந்தி திரு வைத்தியநாத ஐயரின் இந்தத் துணிச்சலான செயலுக்குப் பாராட்டுத் தெரிவித்து 22-7-1939-ம் வருஷத்திய "ஹரிஜன்" இதழில் எழுதினார். என்றாலும் இதை எதிர்த்தவர்கள் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்க எண்ணியதைத் தெரிந்து கொண்ட அப்போதைய முதலமைச்சர் திரு ராஜாஜி, விரைந்து செயல்பட்டு அவசரச் சட்டம் ஒன்றைக் கொண்டு வந்தார். பின்னர் அது முறையாகத் தாக்கல் செய்யப் பட்டுச் சட்டமாக நிறைவேறியது. வைத்தியநாத ஐயரின் துணிச்சலான இந்தக் காரியத்தினால் புதிய சட்டம் ஒன்றே போட முடிந்தது அரசினால். இதைத் தவிரவும், கல்கி திரு சதாசிவமும், எம்.எஸ். சுப்புலக்ஷ்மி அம்மாளும் மதுரையைச் சேர்ந்தவர்களே. இவர்களின் தேசப்பற்றைப் பற்றிக் குறிப்பிட வேண்டியதில்லை. காந்தி அவர்கள் மதுரையில் தான் முதன்முதல் உழவர் ஒருவரின் ஆடையைப் பார்த்துவிட்டு மனம் வருந்தி அன்று முதல் தானும் அரையாடை அணிவதை வழக்கமாய்க் கொண்டார். இந்தியாவிலேயே முதன்முதலாய் காந்தியின் நினைவால் அமைக்கப் பட்ட காந்தி ம்யூசியம் மதுரையில் அமைந்துள்ளது. சபர்மதி ஆசிரமத்தை நினைவூட்டும் குடிலும், காந்தி உபயோகித்த பொருட்களைக் கொண்ட கண்காட்சியும் அரிய புகைப்படங்களும் சமாதியும் இருப்பது இதன் தனிச்சிறப்பு. மதுரையின் பெருமையில் காந்தி ம்யூசியம் இன்றளவும் முதலிடம் வகிக்கிறது.
தெற்கு கோபுரத்திற்கு எதிரே மாநகராட்சிக் கழிப்பிடத்துக்கு அருகே இருக்கும் தெருவில் ரமண மகரிஷி பிறந்த வீடு உள்ளது. அதே போல் மேல அனுமந்தராயன் வீதியில் எம்.எஸ். சுப்புலக்ஷ்மி அம்மாவின் வீடு உள்ளது. மேலச்சித்திரை வீதியில் மதுரை சோமு அவர்களின் வீடு இருந்தது. மேல ஆவணி மூல வீதியில் இருந்து வடக்கு கிருஷ்ணன் கோயில் தெரு வழியாகச் சென்றால் வரும் சங்கீத விநாயகர் கோயில் தெருவில் தில்லானா மோகனாம்பாள் புகழ் சேதுராமன் – பொன்னுச்சாமி இருவரின் வீடுகளும் உள்ளன. அருகே உள்ள மற்றொரு தெருவிற்கு இவர்களின் பாட்டனார் வித்வான் பொன்னுசாமிப் பிள்ளை அவர்களின் பெயரால் வித்வான் பொன்னுசாமிப் பிள்ளைத் தெரு என்று வழங்கப் பட்டது. வடக்கு மாசி வீதியில் இருக்கும் வடக்கு கிருஷ்ணன் கோயில் ஒரு மாடக் கோயில். அந்தக் கோயிலின் சிற்பங்கள் அழகை வர்ணிக்க வார்த்தைகள் இல்லை. அதை விடச் சற்றுத் தள்ளி அமைந்திருந்தது ராமாயணச் சாவடி. (இப்போ இருக்கா) இந்த ராமாயணச் சாவடியில் ராமாயணம் படிப்பதோடு மட்டுமில்லாமல் கிருஷ்ணர் கோயிலின் திருவிழாவின் போதும், மற்ற திருவிழாக்காலங்களிலும் இங்கே சிறப்பு அலங்காரங்கள் நடைபெறும். கூட்டம் அலை மோதும் அப்போவே. ராமாயணச்சாவடிக்கு எதிரே இருக்கும் தெருவில் புகுந்து போனால் சிம்மக்கல்லில் கொண்டு விடும்.
Monday, April 20, 2009
மதுரை அரசாளும் மீனாக்ஷி!
Posted by Geetha Sambasivam at 4/20/2009 01:11:00 PM
Labels: கீதா சாம்பசிவம்
Subscribe to:
Post Comments (Atom)
5 Comments:
would like to add some thing, gandhi museum is one of rani mangammal palace. i think you forgot that perumal mestry veethi, (west, north) kakathoppu . very glad to read abt madurai.
(a madurai loner in bangalore)
அடேங்கப்பா!
Ramanar veedu irukkum theruvin peyar, chokkappan naikcen theru.
Other than perumal maistry, one marret street is also there. Marret renovated Thirumalai naicker palace, Perumal Maistry is mason who take over that work.
மதுரைன்னா சும்மாவா. அப்புறம் அந்த மதுரைத் தமிழ் , சங்கம் வளர்த்த ஊர் அல்லவா?
Post a Comment