சரி இன்னைக்காவது நாம மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்குள்ளப் போகலாம். கீழே இருக்கறப் படம் ஏற்கனவே சொன்ன மாதிரி எனக்கு மின்னஞ்சலில் வந்த புகைப்படம். ஆனா அருமையான படம். இது வடக்காடி வீதியினைக் காட்டும் புகைப்படம்.
புகைப்படத்தைப் பற்றிப் பேசுவதற்கு முன் அன்னை அங்கயற்கண்ணியின் வரலாறு சுருக்கமாக.
மதுரையை ஆண்ட மலயத்துவஜ பாண்டியன் தனக்கு வாரிசு வேண்டுமென்பதற்காக வளர்த்த வேள்வித்தீயில் தோன்றியவள் அன்னை அங்கயற்கண்ணி. உமையன்னையின் அம்சம். அழகிய மீனைப் போன்றக் கண்களைக் கொண்டிருந்ததாலும் மீன் எப்படி தன் கண்பார்வையாலேயே தன் குஞ்சுகளைப் பாதுகாக்கிறதோ அது போல் தன் அடியவர்களைப் பாதுகாப்பவள் என்பதாலும் இவளுக்கு அங்கயற்கண்ணி (அம்+கயல்+கண்ணி - அழகிய மீனைப் போன்ற கண்கள் உடையவள்), மீனாக்ஷி (மீன் + அக்ஷி - அக்ஷம் என்றால் வடமொழியில் கண்) என்ற பெயர்கள் அமைந்தன. பெற்றவர் வைத்தப் பெயர் தடாதகைப் பிராட்டியார்.
அன்னை வேள்வித்தீயிலிருந்து சிறுமியாகத் தோன்றியபோது அவளுக்கு மூன்று கொங்கைகள் இருந்தன. அதனைக் கண்டு பெற்றோரான மலையத்துவசனும் காஞ்சனமாலையும் வருந்த, தகுந்த மணவாளனை இந்தப் பெண் காணும் போது இயற்கைக்கு மாறாக இருக்கும் மூன்றாவது கொங்கை மறையும் என்று வானமகள் சொல் சொன்னது.
அன்னையும் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக அரச மகளுக்குரிய எல்லாக் கலைகளையும் அரசமகனுக்குரிய கலைகளையும் கற்றுத் தேறினாள். அன்னை தகுந்த வயதுக்கு வருமுன்னரே பாண்டியன் காலமாக அன்னையை மதுரைக்கு அரசியாக முடிசூட்டினர்.
அரசியான பின் அவளும் அரசர்களுக்குரிய முறைப்படி எல்லா திசையிலும் சென்று பகையரசர்களை வென்று வாகை சூட விரும்பி திக்விஜயம் மேற்கொண்டாள். எல்லாத் திசைகளிலும் உள்ள அரசர்களை வென்று வடதிசையில் கயிலைக்குச் சென்று எல்லா சிவகணங்களையும் வெல்கிறாள். அன்னையின் வீரத்தைக் கண்டு சிவபெருமானே போருக்கு எழுந்தருளுகிறார். அன்னையை ஐயன் கண்டதும் அன்னையின் மூன்றாவது கொங்கை மறைகிறது. அதனைக் கண்ட அன்னை இவரே தனக்கு மணாளன் என்று உணர்ந்து பெண்ணரசிக்குரிய நாணத்தால் தலை குனிகிறாள். ஐயன் தான் மதுரைக்கு எழுந்தருளி அவளை மணப்பதாக உறுதி கூறுகிறார். அதன் படி மதுரைக்கு எழுந்தருளி அன்னையை மணந்து சுந்தரப்பாண்டியனாக வேப்பம்பூ மாலை சூடி மதுரை அரசனாக மூடி சூட்டிக் கொள்கிறார். பின்னர் அன்னைக்கும் ஐயனுக்கும் முருகப் பெருமானின் அம்சமாக உக்கிரப் பாண்டியன் தோன்ற அவனுக்குத் தகுந்த வயது வந்ததும் அரசனாக முடிசூட்டி அன்னையும் ஐயனும் மதுரை நகரில் கோயில் கொள்கின்றனர். அது தொடங்கி வாழையடி வாழையாக பாண்டிய அரசர்கள் அன்னை மீனாட்சியின் பிரதிநிதியாக மதுரையை ஆண்டு வந்தனர். அன்னை இன்றும் மதுரை நகருக்கு அரசியாய் விளங்குவதால் மதுரை வாழ் மக்கள் அனைவரும், அவர் சைவரோ வைணவரோ, யாராயிருந்தாலும் அன்னையின் அருளை நாடி நாள்தோறும் அன்னையின் கோயிலுக்கு வந்து சென்ற வண்ணமே இருக்கிறார்கள்.
மதுரையைக் கோயில் மாநகர் என்று கூறுவார்கள். திட்டமிட்டுக் கட்டிய பழைய நகரங்களில் ஒன்று மதுரை. கோயிலை மையமாக வைத்து திருவீதிகள் நான்கு புறமும் அமைந்திருக்கின்றன. கோவிலின் வெளித் திருச்சுற்றாக இருக்கும் ஆடி வீதி, அதனைச் சுற்றி சித்திரை வீதி, ஆவணி மூல வீதி, மாசி வீதி, வெளி வீதி எனத் தெருக்கள் நீள் சதுரமாக கோயிலைச் சுற்றி அமைந்துள்ளன. மதுரையில் மாதந்தோறும் திருவிழாக்கள் நடந்தவண்ணம் இருக்கும். அன்னையும் ஐயனும் ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு திருவீதியில் வலம் வருவர். எந்த மாதத்தில் எந்த வீதியில் வலம் வருவார்களோ, அந்த வீதிக்கு அந்த மாதத்தின் பெயரை வைத்திருக்கிறார்கள்.
இந்தப் புகைப்படத்தில் இருப்பது வடக்கு ஆடி வீதி. கோயிலுக்குள்ளேயே இருக்கிறது இந்த திருவீதி. இந்தப் படத்தைப் பார்க்கும் போது பல நினைவுகள் பொங்கி வருகின்றன. முதலில் எதிரே தூரத்தில் நான்கு தூண்கள் மட்டும் தெரிகிற திருக்கல்யாண மண்டபம். ஒவ்வொரு வருடமும் சித்திரைத் திருவிழாவில் அன்னைக்கும் அப்பனுக்கும் திருக்கல்யாணம் இந்த மண்டபத்தில் தான் நடக்கிறது. அது மட்டும் அன்றி கோவிலில் நடக்கும் எல்லா வித சொற்பொழிவுகளும், இசை நிகழ்ச்சிகளும் இந்த மண்டபத்தில் தான் நடைபெறும். இந்த மண்டபத்தில் சொற்பொழிவு ஆற்றும் போது தான் வாரியார் சுவாமிகளின் அருளாசியும் பாராட்டுக்களும் அடியேனுக்கு கிடைத்தன. பல முறை அவரின் சொற்பொழிவுகளை இந்த மண்டபத்தில் கேட்டிருக்கிறேன். அது மட்டும் அன்றி மற்ற பலருடைய சொற்பொழிவுகளும் இசைக் கச்சேரிகளும் கேட்டு ரசித்தது இந்த மண்டபத்தில் தான்.
அதற்கடுத்து நினைவிற்கு வருவது திருக்குறள் சபை. வலப்பக்கம் தெரியும் பெரிய கோபுரத்தின் முன்பு ஒரு சின்ன மஞ்சள் நிறக் கட்டடம் தெரிகிறதே. மதில் சுவரை ஒட்டிய கட்டிடம் அன்று. கோபுரத்திற்கு முன் புறம் உள்ளது. இந்த சிறு மண்டபத்தில் திருவள்ளுவர் சிலை இருக்கும். அதற்கு முன் தினந்தோறும் திருக்குறள் சொற்பொழிவு நடைபெறும். கேட்டு இன்புறும் வாய்ப்பு சில முறை கிட்டியுள்ளது.
அடுத்து நினைவிற்கு வருவது இசைத் தூண்கள். இந்தப் படத்தில் அவை தெரியவில்லை. ஆனால் அருமையான தூண்கள் அவை. அந்தத் தூண்களில் வெவ்வேறு இடத்தில் தட்டும் போது வெவ்வேறு இசை வெளிப்படும். இது போன்ற இசைத் தூண்களை திருமாலிருஞ்சோலையான அழகர் கோவிலிலும் நாச்சியார் திருமாளிகையாகிய வில்லிபுத்தூரிலும் கண்டிருக்கிறேன். மதுரையில் வாழும் பலருக்கே தெரியாத வியப்பான விஷயம் இது.
அடுத்து நினைவிற்கு வருவது இந்தப் படத்தில் தெரியும் மரத்தின் கீழ் வீற்றிருக்கும் பிள்ளையார். வாராவாரம் அதிகாலை 5 மணிக்கு இவர் திருமுன்பிருந்து தொடங்கி இறைவன் திருப்பெயர்களைப் பாடிக் கொண்டு கோவிலை வலம் வரும் சாயி பஜன் குழுவினருடன் பலமுறை கோவிலை வலம் வந்தது நினைவிற்கு வருகிறது.
அடுத்து நினைவிற்கு வருவது இடப்புறம் கொஞ்சமே கொஞ்சமாய் தெரியும் பதினாறு கால் மண்டபம். இந்த மண்டபத்தில் தான் முறுக்கு, சுண்டல் போன்றவற்றை விற்கும் சிறு வியாபாரிகள் அமர்ந்திருப்பார்கள். ஒவ்வொரு முறை கோவிலுக்கு வரும் போதும் இவர்களிடம் வாங்கித் தின்ற தின்பண்டங்கள் ஒவ்வொன்றும் தமிழமுதைப் போல் என்றும் நினைவில் தித்திப்பவை. :)
இவை எல்லாவற்றையும் விட இந்தப் படத்தில் எனக்கு மிகவும் பிடித்து அந்த நீல நிற மேகக் கூட்டங்கள் தான். என்ன அருமையான படம் இது. அந்த மேகக் கூட்டங்கள் தான் இந்தப் படத்தின் அழகுக்கு அழகூட்டுகிறது என்று எண்ணுகிறேன். இந்தப் படத்தை எடுத்தவரும் அதனை அனுப்பியவர்களும் நூறாண்டு காலம் நலமாய் வாழட்டும்!
***
இது ஒரு மீள்பதிவு.
Wednesday, September 26, 2007
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் வடக்கு ஆடி வீதி
Posted by குமரன் (Kumaran) at 9/26/2007 05:35:00 AM 32 comments
Labels: குமரன்
Friday, September 21, 2007
தல புராணம் - திருவேடகம்
Posted by மருத புல்லட் பாண்டி at 9/21/2007 01:58:00 PM 3 comments
Labels: மருத புல்லட் பாண்டி
தல புராணம் - கோச்சடை
கோச்சடை முத்தையா சுவாமி கோவில்ல இருக்கு இது தமிழக சுற்றூலா துறை வரைபடத்தில் பாக்கலாம்.
ஊரின் பெயர் காரணம் : புட்டு திருவிழா மதுரைல்ல நடக்கும் தெரியுமில்ல அதாங்க சொக்கநாதர் பாண்டிய மன்னனிடம் பிரம்படி வாங்கிய கதை அது நடந்தது எங்க ஊரிலதான் கோச்சடை : கோபம்+சடையன்(சிவன் கோபத்துடன் வந்து படுத்த இடம் அதான் இன்னும் தண்ணீர் தொட்டில்ல அணை போட்டுட்டு இருக்காங்க !!!)
வாங்க வந்து பாருங்க எங்க தோப்பிலிருந்து தான் திருவிழாவுக்கு திருவாத்தி மரம் போகும். அதற்கு ஆதாரம் கோச்சடையில் வைகை கரையோரம் இருக்கும் மீனாட்சி கோவில்ல இருக்கும் பிரம்பு வடிவம் வடிக்கப்பட்டுள்ள சிவலிங்கம் வந்து பாருங்க
Posted by மருத புல்லட் பாண்டி at 9/21/2007 01:52:00 PM 3 comments
Labels: மருத புல்லட் பாண்டி
தல புராணம் - ரமண மகரிஷி
Posted by மருத புல்லட் பாண்டி at 9/21/2007 01:40:00 PM 0 comments
Labels: மருத புல்லட் பாண்டி
Friday, September 7, 2007
தல புராணம் ... 3
genetical-ஆக (?) அந்த புகை மேல இருந்த ஆர்வம் காரணமாக சின்ன வயசில இருந்தே ஒரு ஈர்ப்பு. கொஞ்சம் வளர்ந்ததும் ஊருக்குப் போகும்போதெல்லாம் திருட்டு தம்… அப்படியே போனது, காலேஜ் வந்தப்போ தொடர்ந்தது. ஊர்ல புளியந்தோப்புதான்; ஆனா மதுரையில ‘திருமலை நாயக்கர் மகால்’தான். நம்ம காம்பஸ்ல இருந்து ரொம்பப் பக்கத்திலதான் - ஒரு 100 மீட்டர்தான். இந்த மகாலுக்கும், மரியன்னை கோயிலுக்கும் ஒரு சுரங்கப்பாதை இருந்ததாகவும், கடைசி நாயக்க மன்னர் யாருக்கும் தெரியாமல் கிறித்துவரானாரென்றும் ‘கட்டுக் கதை’ ஒன்று உண்டு. ஆனா நாங்க (நானும், ஆல்பர்ட்டும்) அந்த சுரங்கப் பாதையில் போறதில்லை; ராஜ பாட்டையில்தான்! அந்த நாட்களில் மகால் ஒரு - least cared toursit spot -ஆக இருந்தது. வெளவ்வாலும், புறாக்களும்தான் அப்போ அங்க ‘ராஜ பரிபாலனம்’ நடத்திக்கிட்டு இருந்தாங்க. அதுக்குப் பிறகு, மதுரை கோர்ட் வந்தது. எங்களோட ராஜாங்கத்தை கோ.மு., கோ.பி. அப்டின்னு பிரிக்கலாம்.; கோர்ட் வர்ரதுக்கு முந்தி, கோர்ட் வந்த பிறகுன்னு.
கோ.மு.வில பகல்ல மகாலைச் சுத்தி உள்ள வெற்றிடங்களில் பசங்க நிறைய ஃபுட்பால் விளையாடிக்கிட்டு இருப்பாங்க. ‘ரிப்பீட்டு’ சொல்றேன்; நிஜமா சொல்றேன்; வழக்கமா சத்தியம் பண்றதில்லை; இல்லன்னா சத்தியமாகூட சொல்லுவேன் - ஒரு நாள்கூட ஒரு ஆள்கூட யாரும் கிரிக்கெட் ஆடிப் பார்த்ததில்லை; கிட்டி விளையாடிக்கிட்டு இருப்பார்கள். குண்டு, கோலி, பம்பரம், பட்டம், சடுகுடு என்னும் கபடி மற்ற எல்லாமே உண்டு. பாவம், இந்தக் காலத்துப் பசங்க - அட, அது எல்லாமே நீங்கதானே - அந்த விளையாட்டுகளை விளையாடி என்ன, பார்த்துகூட இருக்க மாட்டீர்கள். நீங்கள்ளாம் யாருப்பா; ஸ்டெஃப்பிய பாத்து ஜொள்ளு விட்டாலும், விளையாடணும்னா கிரிக்கெட்தானே - (இளவஞ்சி, நான் ஒண்ணும் உங்கள சொல்லலை!) இன்னும் பொம்பளப் பசங்க கிரிக்கெட்டும் பிரபலமாச்சுன்னா கேக்கவே வேணாம். ஆனா, அடுத்த generation-க்கு அப்படித்தான் - உங்க பசங்க ‘கிர்க்கெட்டிணிகள்’ (அதாங்க, கிர்க்கெட் வீரிகள்!) படம் போட்ட ஸ்கூல் நோட்புக், சட்டை போட்டுக்குவாங்க; உங்க கூடவே உங்க கையைப் பிடிச்சிக்கிட்டு வந்துகிட்டு இருக்க பிள்ளங்க திடீரென உங்க கையை விட்டுட்டு பெளலிங் போடறது மாதிரியோ, பேட் பண்றது மாதிரியோ ஒரு நிமிஷம் பண்ணிட்டு, அடுத்த நிமிஷம் சாதாரணமா உங்க கையப் பிடிக்கும்போது ‘ஆஹா, நம்ம பிள்ளைக்கு என்னமோ ஆச்சு; நாளைக்கே மந்திரிக்கணும்’ அப்டின்னு நினப்பீங்களே - சுருக்கமா சொல்லணும்னா நீங்க இப்ப ‘அலையறது’ மாதிரி அலையும்போதுதான் உங்களுக்கெல்லாம் உறைக்கும். அதுவரைக்கும் உங்க காதுல ஒண்ணுமே விழாது - howzzzaaaat !!!-அப்டிங்கிறது தவிர. சரி..சரி நம்ம விதயதிற்கு வருவோம்.
இந்த கோ.மு. பீரீயட்ல எங்க safe place எதுன்னா, மகாலுக்கு மேல போய் - அப்பல்லாம் டிக்கெட் கிடையாது எங்கள மாதிரி ஆளுகளுக்கு; வெளியூர் பார்ட்டிகிட்ட கொஞ்சம் எதுனாச்சும் மாடிப்படி கிட்ட நிக்கிறவர் கறந்துடுவார் - நாங்கல்லாம் யாரு, ரெகுலர் பார்ட்டிகள்ல. அங்க திருடன் கன்னம் வச்சு உடும்பை வச்சு ராசா சயன அறையில இறங்கி, ராணி கழுத்து மாலையை லவட்னதுன்னு - எல்லாம் ராசா வச்ச போட்டினாலதான் - ஒரு இடம் சொல்லுவாங்களே அதுதான் நம்ம ஸ்பாட். உக்காந்து பத்த வச்சிட்ட பிறகு, நின்னுக்கிட்டே இழுத்து புகை விட, யாரேனும் தெரிஞ்ச மூஞ்சி வர்ரது மாதிரி இருந்தா காலுக்கடியில் சிகரெட்டப் போட்டுவிட்டு நல்ல பிள்ளையாய் வந்துருவம்ல. அதுக்கு வசதியான இடம் அதுதான். இப்படி எத்தனை நாள் போய்ட்டு வந்திருப்போம்; ஆன ஒரு நாள் கூட இந்தச் சுவத்தில நிறைய பேருக அவங்க பேரையெல்லாம் கிறுக்கியிருக்காங்களே நாமும்தான் கிறுக்குவுமேன்னு நினச்சதுகூட கிடையாதுங்க. (ராமனாதன் கவனிக்கிறீங்களா?)
கோ.பி.-ல நாங்களும் இப்ப கொஞ்சம் தெளிஞ்சுட்டோம். காம்பஸ் பயம் இன்னும் இருந்திச்சு - என்னதான் இருந்தாலும் அது நம்ம ஏரியா இல்லையா? ஆனா கோர்ட் இப்ப ரொம்ப பிசியான இடமா ஆயிடுச்சி. நிறைய கருப்புக் கோட்டுகள்; ஆட்கள். மகாலுக்கு உள்ளயே ஒரு சிகரெட், டீக்கடை வந்திருச்சி. உள்ளேன்னா, மகால் மெயின் வாசலுக்கு வடது பக்கம் ஒரு சின்ன வாசல்; அதை ஒட்டி அந்தக் கடை. எங்கள மாதிரி திருட்டு தம் கேசுகள்; சீனியர்கள் கண்ணில் படாமல் இருப்பதற்காக ஓரங்கட்டும் குட்டி வக்கீல்கள் - இவர்களுக்கென்று ஒதுக்குப்புறமாக ஒரு ஸ்மோக்கிங் கார்னர் உண்டு. அங்க உக்காந்து சிகரெட் பிடிக்க தைரியம் வந்தபோது கல்லூரி இளங்கலை மூன்றாமாண்டுக்கு வந்தாச்சு.
இப்பவும் மகாலைத் தாண்டிப் போகும்போது திரும்பிப் பார்க்காமல், போக முடிவதில்லை. சில நாட்கள் சாயங்காலம் அங்கே போய் ‘இழுத்திட்டு’ அதற்குப் பிறகு வெளியில் உள்ள பார்க்கில் படுத்துக்கொண்டு, ஒரு செளராஷ்ட்ர அம்மா கொண்டுவரும் ‘உன்னா உடித்’ (அவித்த பாசிப்பயறு + எதோ ஒரு பொடி தூவித் தருவார்கள்) பத்து பைசாவிற்கு வாங்கி சாப்பிட்டால்…ம்..ஹும்…அது அந்தக் காலம்.
அப்படி நம்ம காம்ப்ஸ் லைஃப்ல இந்தப் பழக்கம் வந்திரிச்சினா, இன்னொரு பழக்கமும் தொத்திக்கிரீச்சி. அது நல்ல பழக்கமா…இல்ல, கெட்ட பழக்கமா? - அத நீங்கதான் சொல்லணும்.
Posted by தருமி at 9/07/2007 02:05:00 PM 14 comments
Labels: தருமி