ம்ம்ம்ம், என்ன சொல்றது? இப்போ நவராத்திரி நேரம்ங்கிறதாலே, சின்ன வயசு நவராத்திரி நினைவுகள் எல்லாம் வருது. நாங்க கழுதை அக்கிரஹாரத்திலே இருக்கும்போது தான் எங்க வீட்டிலே கொலு வைக்க ஆரம்பிச்சாங்கன்னு நினைக்கிறேன். விவரம் புரியாத அந்த வயசிலே நவராத்திரிக்கு எங்க வீட்டில் வீட்டு வேலைகளில் அம்மாவுக்கு உதவும் "சுப்பம்மா" என்னும் முதிய பெண்மணி, (இவர் எங்க அப்பாவை "என்னடா ராமகிருஷ்ணா?" என்று பெயர் சொல்லிக் கூப்பிடும் அளவு அதிகாரம் படைத்தவர், குடும்பப் பாட்டு, குடும்ப நினைவு மாதிரி குடும்ப உதவியாளர்) எனக்குக் கிருஷ்ணன் கொண்டையில் இருந்து அஜந்தா கொண்டை, பிச்சோடா, மல்லிகைப் பூவைத் தலையில் வைத்துத் தைத்து அலங்காரம் செய்தல் என்று தினம் ஒரு முறையில் அலங்காரம் செய்து விடுவார். பூத் தைத்தல் என்றால் எங்க சுப்பமா நிஜமாவே தலையில் நேரடியாகப் பூக்களை வரிசைப் படுத்தி அலங்கரித்துத் தைப்பார். இப்போ மாதிரி வாழைப் பட்டையிலோ அல்லது வேறு ஏதாவது பட்டையிலோ வைத்துத் தைத்து விட்டுப் பின்னலில் வச்சுக் கட்டறது எல்லாம் இல்லை. வலிக்கும். அதை விடப் பாடு என்னவென்றால், பிரிக்கும்போது நான் கத்தும் கத்தல் தான்.
அண்ணாவும், தம்பி பெரிய பையன் ஆனதும் அவனும் துணைக்கு வர என்னுடைய நவராத்திரிப் பட்டினப் பிரவேசம் நடக்கும். கையில் ஆளுக்கு ஒரு பை எடுத்துக் கொள்வோம். சில தெரிந்த வீடுகளில் அண்ணா, தம்பிக்கும் சுண்டல் அளிக்கப் படும். பொதுவாக அண்ணா உள்ளேயே வரமாட்டார். வெளியே நின்று விடுவார். ஆகையால் தம்பி சின்னவன், குழந்தை என்பதால் அவனுக்குக் கட்டாயம் கிடைக்கும். என்றாலும் அங்கேயே பிரிச்சுத் தின்பது எல்லாம் கிடையாது. வீட்டுக்கு வந்து அப்பா, அம்மாவிடம் அன்றாடக் கொலு வரவு, செலவுகளை ஒப்பித்துவிட்டு ஒற்றுமையாகப் பகிர்ந்து கொள்வோம்! இந்த, இந்தப் பாக்கெட்டில், இன்னார் வீட்டுச் சுண்டல் என்பது நினைவு வச்சுக்கறது எனக்குத் தானாகவே கைவரப் பெற்றிருந்தது.இது இன்றளவும் என்னோட மறுபாதி ஆச்சரியப் படும் விஷயம், எப்படி இவ்வளவு சரியா நினைப்பு வச்சுக்கறே என்பார். அவருக்குச் சில சமயம் என்னோட பேரே மறந்துவிடும். நீ யாருன்னு கேட்கலை. அந்தளவுக்கு மறதி.
அப்போ எல்லாம் குழந்தைகளுக்குத் தேங்காய், பழம் கிடைக்காது. வெற்றிலை, பாக்கு, சுண்டல் மட்டும்தான். பழம் கொடுக்கும் வீட்டில் சுண்டல் கிடைக்காது. மனசுக்குள் திட்டிப்போம். போன முறை இவங்க வீட்டுச்சுண்டல் உப்பு ஜாஸ்தி, என்றோ, உப்போ போடலை என்றோ பேசிப்போம். அவங்க வீட்டுப் பெண்ணுக்கு என்ன அலங்காரம் என்பது உன்னிப்பாய்க் கவனிக்கப் படும். மறுநாள் வீட்டில் அது பற்றிய வாதப் பிரதிவாதங்களுக்குப் பின்னர், அன்றைய என்னோட அலங்காரத்தில் குறிப்பிடத் தக்க மாறுதலோ, அலங்காரமே மாறுதலோ செய்யப் படும். மறுநாள் பிரிக்க நேரமில்லாமல் கொலு அலங்காரத்துடனேயே பள்ளிக்குச் சென்ற அனுபவமும் உண்டு. மேல ஆவணி மூலவீதியில் இருந்த பெரியப்பா வீட்டுக்குத் தினமும் விசிட் உண்டு. லட்சுமி நாராயணபுர அக்ரஹாரத்தில் இருக்கும் பெரியப்பா வீட்டுக்குத் தள்ளி இருப்பதால் பெரியம்மா வந்து அழைத்துச்சென்று கொண்டு விடுவார். அங்கே போவது என்றால் கொஞ்சம் சந்தோஷமா இருக்கும். பெரியம்மா மத்தியானம் மாட்னி ஷோவுக்குக் கல்பனா தியேட்டரில் என்ன படம் ஓடுகிறதோ அதுக்கு அனுப்பி வைப்பார். அப்பா ரொம்ப ஸ்ட்ரிக்ட் என்பதால் நிச்சயமாய் அப்பாவுக்குத் தெரியாமல் தான். திடீர்னு அப்பா அங்கே வந்துவிட்டால், பெரியம்மாவின் அப்பா நைஸாக இங்கே பக்கத்தில் ஒரு வீட்டில் கூப்பிட்டுக் கொண்டிருந்ததால் போயிருக்காங்க, இதோ போய் அழைத்து வருகிறேன் என்று சொல்லிவிட்டு மெதுவாய்த் தியேட்டருக்கு வந்து, நான் உட்கார்ந்திருக்கும் இடம் முன்பே பெரியம்மாவிடம் கேட்டுத் தெரிந்து கொண்டிருப்பார், வெளியே இருக்கும் வாட்ச்மேன் அவங்களுக்கு ரொம்ப நாள் பழக்கம் என்பதால் அவரிடம் சொல்லிக் கூட்டிப் போய் எச்சரிக்கை செய்து வைப்பார்.
அப்பா வந்திருப்பது தெரியாமல் படம் முடிந்து வந்து படத்தைப் பற்றிப் பேசிக் கொண்டு மாட்டிக் கொண்டதும் உண்டு. தாத்தா வீட்டுக்குப் (அம்மாவின் அப்பா) போவது இன்னும் ஒரு தனி அனுபவம். அங்கே கொலு எல்லாம் வச்சுக் கட்டுபடி ஆகாது. சும்மாப் போயிட்டு வருவோம். அப்பாவின் அப்பா பத்திச் சொல்லலைனு நினைக்காதீங்க. அவர் என் தம்பி பிறக்கும் முன்னேயே காலம் ஆகிவிட்டார் என்பதால் அவ்வளவாய் நினைவு இல்லை. என்றாலும் அவரைப் பற்றிய குறிப்புக்களும் இடம் பெறும். எல்லா வீட்டு உலாவும் முடிந்து வீட்டுக்கு வந்து எல்லார் வீட்டுச் சுண்டலும் விமரிசங்களுடன் அரைபட்டு முடிச்சதும், சாவகாசமாய்க் கோவில் உலாக் கிளம்புவோம். அப்பா, அண்ணா, தம்பி தனியாப் போவாங்க. நான், அம்மா அக்கம்பக்கம் பெண்களுடனோ அல்லது இரண்டு பேரும் தனியாவோ போவோம். அது வரை எல்லாக் கோவிலிலும் அலங்காரமும் இருக்கும். வீதிகளில் கூட்டமும் இருக்கும். நிதானமாய் மீனாட்சி கோவில், மதனகோபாலசாமி கோவில், இம்மையில் நன்மை தருவார் கோவில்,கூடலழகர் கோவில் என்று ஒரு நாள் வைத்துக் கொண்டால் மறுநாள் மீனாட்சி கோவில் போயிட்டு வடக்குப் பக்கம் கோவில்களுக்கும், ராமாயணச்சாவடியில் தினமும் செய்யும் அலங்காரமும் போய்ப் பார்ப்போம். இப்போ ராமாயணச் சாவடி அப்படியே இருக்கா தெரியலையே?
Saturday, October 13, 2007
மதுரையில் கொலு பாருங்க!
Posted by Geetha Sambasivam at 10/13/2007 02:32:00 PM 39 comments
Labels: கீதா சாம்பசிவம்
Sunday, October 7, 2007
தலபுராணம் - 4.
சொகுசான அறை; சின்ன நண்பர்கள் குழாம்; புதிதாக ஏற்படுத்திக்கொண்டிருந்த புகைப்பழக்கம் -வாழ்க்கை நல்லாவே போச்சு. ஒரு கெட்ட பழக்கம் பழகியாச்சு. அறுபதுகளில் ஆரம்பித்த அந்தப் பழக்கம் 1990 ஜனவரி 10 தேதி இரவு 12 மணி வரை தொடர்ந்தது. இன்னொரு பழக்கம் சொன்னேனே - அது நல்ல பழக்கமா, இல்ல கெட்ட பழக்கமா? நீங்களே முடிவு பண்ணிக்கீங்க,, சரியா?
எங்களுக்குக் கொடுக்கப்பட்ட அறை அந்த காம்பஸின் கடைசியில், மேற்கு மூலையில் இருந்தது. அதை ஒட்டி காம்பவுண்டு சுவர். எங்கள் ‘முன்னோர்கள்’ எங்களுக்கு வைத்து விட்டுப் போயிருந்த இன்னொரு வசதி என்னவென்றால், எங்கள் அறையை ஒட்டிய காம்பவுண்ட் சுவற்றில் ஏறிக் குதிப்பதற்குரியவாறு அங்கங்கே செங்கல்கள் பெயர்ந்திருக்கும். நாங்கள் அந்த காம்பஸுக்குள் வருவதற்கு இதுவே சுலப வழி எங்களுக்கு. ஒரு டீ குடிக்கணுமா, ஒரு ‘இழுப்பு’ இழுக்கணுமா, சும்மா ஒரு ஜம்ப்; அவ்வளவுதான். எங்களுக்குத்தான் அத்தனை சுலபம். எல்லாருக்கும் அப்படியெல்லாம் முடியாது. எங்கெங்கே செங்கல்லில் ஓட்டை, இன்னும் பல விஷயம் அதில…லேசுப்பட்ட டெக்னிக் இல்ல. இதுக்கெல்லாம் பிறகு ஏதோ போனா போகுதுன்னு, அப்பப்போ படிக்கக் கூட செய்வோம்!
பள்ளியிறுதி வரை வீட்டுக்குத் தெரியாமல் போனது ஒரே ஒரு சினிமா. எப்படியோ, தைரியமாய், காசெல்லாம் செட்டப் பண்ணி நண்பர்களின் வற்புறுத்தலிலும், சுயமாய் வளர்த்துக்கொண்ட தைரியத்திலும் (?) ஒரு பெரிய ரிஸ்க் எடுத்து பார்த்தது அந்த சினிமா. மற்றபடி சினிமா போனா வீட்டோடு; இல்ல ஊர்ல இருந்து விருந்தாட்கள் யாரும் வந்தால் ஒட்டிக்கிறது அவ்வளவுதான். இங்கிலீசு படம் எல்லாம் ஒண்ணிரண்டு - எல்லாம் சாமி படங்கள் -தப்பா எடுத்துக்காதீங்க, இப்ப சொல்ற ‘சாமி படங்கள்’ இல்ல. நிஜ சாமி.. Ten Commandments மூணுதடவை பாத்தேன். எப்டீங்கிறிங்களா? முதல்ல வீட்டோட; அதுக்குப் பிறகு இந்தப் படம் பார்க்கவே ஊரிலிருந்து வந்த உறவு மக்களோட - ஒரு guide மாதிரி வச்சுக்கங்களேன்! அதில என்னென்னா, பாத்த அத்தனை இங்கிலீசு படங்கள்ல வர்ர மூஞ்சு எல்லாம் ஒரே மாதிரிதான் தெரிஞ்சுது. முதல் சீன்ல செத்துட்டான்னு நினச்சவன் அடுத்த சீன்ல மறுபடியும் உயிரோடு வருவான்! ஏதோ, ‘Ten Commandments’ மட்டும் ஒரு ஆளு-Charlton Heston- தாடியோடவும், மொட்டைத்தலையோடு Yul Brynner வந்ததும் நல்லதாப் போச்சு.
காம்பஸுக்குப் போனால் இரவு ஒன்பது மணிக்கெல்லாம் வீட்டில் ஆஜராகி இருக்கவேண்டுமென ஸ்ட்ரிக்ட் ரூல். அதனால, இந்த சினிமாவுக்குப் போற எண்ணமே வந்ததில்லை. ஏதோ , ஒரு டீ குடிச்சமா, ஒரு தம் அடிச்சமான்னு இருந்தோம். அப்பதான் ரீகல் தியேட்டர் பற்றி மக்கள் விவரமா சொன்னாங்க. எப்படி no risk-ல இங்கிலீபீசு படம் பாக்க முடியும்னு தெரிஞ்சிச்சு.
ஊருக்கு ஊர் பிரிட்டீஷ்காரங்க டவுன் ஹால்னு ஒண்ணு கட்டிப் போட்டிருப்பாங்க போல. அது மாதிரி இது ஒரு ஹால்; எட்வர்டு ஹால்னு பேரு. மதுரை ரயில் நிலையம் விட்டு வெளியே வந்ததும் மெயின் ரோட்ல இருக்கு. இந்த தியேட்டருக்கு எதிர்த்தாற்போல கிழக்கே போற ரோடுதான் டவுன் ஹால் ரோடு; நேரே போனா மீனாட்சி அம்மன் கோவில்தான். இந்த தியேட்டரிலிருந்து பார்த்தாலே கோவிலின் மேற்குக் கோபுரம் தெரியும். (தியேட்டருக்கு எதிரேயுள்ள டவுன்ஹால் ரோடும்,முடிவில் தெரியும் மீனாட்சி அம்மன் கோவிலின்மேற்குக் கோபுரமும்.)
இந்த தியேட்டர்ல ஒரு விசேஷம் என்னன்னா, பகல் முழுவதும் இது ஒரு வாசகசாலை. சாயங்காலம் ஆறு மணிக்கு அதை மூடி, பென்ச்,ஸ்க்ரீன் அப்படி இப்படி ஒரு பத்து நிமிஷத்தில தியேட்டரா புது ஜென்மம எடுத்திடும். ஆறரை, ஆறே முக்கால் மணிக்கு மேலதான் டிக்கெட்டே கொடுக்க ஆரம்பிப்பார்கள். ஏழு மணிக்கு அப்போதெல்லாம் சட்டமாக இருந்த அரசு நியூஸ் ரீல் போட்டு (ஆமா, இப்போவெல்லாம் அந்த அரசு செய்தித் தொகுப்பு எல்லாம் உண்டா? உண்டென்றால் அதை யார், எங்கே பார்க்கிறார்கள்?), அதுக்குப் பிறகு ஸ்லைடு, ட்ரைலர் எல்லாம் போட்டு முடிச்சி படம் போட எப்படியும் குறைந்தது ஏழேகாலாவது ஆகிவிடும். எவ்வளவு லேட்டானாலும் படம் எட்டே முக்காலுக்குள் முடிந்துவிடும். ஆக, வீட்டிலிருந்து ஆறே முக்கால், ஏழு மணிக்குப் புறப்பட்டால் கூட படம் பார்த்து விட்டு நல்ல பிள்ளையாய் ஒன்பது மணிக்கு முன்பே திரும்பிடலாம். வீட்ல மக்களுக்கு இந்த technicalities எல்லாம் தெரியாது; அதனால மாட்டிக்கிற பயம் இல்லாம போச்சு. சில சின்னச் சின்ன, ஆனா முக்கியமான precautions எடுக்கணும்: நம்ம பசங்ககிட்ட முதல்லேயே சொல்லிடணும்; இல்லன்னா சரியா அன்னைக்கிப் பாத்து வீட்டுக்குத் தேடி வந்திருவானுங்க; இரண்டாவது, திரும்பி வரும்போது கிழிச்ச அரை டிக்கெட்டை எடுத்து பத்திரமா வெளியே கடாசிட்டு வரணும். ஒரு tell tale signs -ம் இருக்கக் கூடாதல்லவா?
இந்தத் தியேட்டருக்கென்றே சில culture உண்டு; மிகவும் ஆச்சரியமானவைகள். டிக்கெட் எடுக்க வரிசையில் நிற்கும்போதெல்லாம் அந்த ஆச்சரியங்கள் அநேகமாக நடக்கும். மிகச் சாதாரண ஆட்களாக இருப்பார்கள். ஆனால், பேச ஆரம்பித்தால் ஹாலிவுட்டின் சரித்திரமே அதில் இருக்கும். எந்தப் படம் எந்தக் கம்பெனியால் எப்போது எடுக்கப் பட்டது; நடிக, நடிகைகள் பெயர்கள், டைரக்டர்கள் எல்லாமே அலசப்படும். பொய்க் கதைகளாக இருக்காது; நிஜமான தகவல்களாக இருக்கும் கிரிக்கெட் விசிறிகள் கெட்டார்கள் போங்க… என்ன, கிரிக்கெட் ரசிகப் பெருமக்களில் நூற்றுக்குத் தொண்ணூறு பேர் மழைக்குக் கூட விளையாட்டு மைதானங்களில் ஒதுங்கி இருக்க மாட்டார்கள். ஆனால் வாய் கிழியக் கிழிய technicalities பேசுவார்கள். இங்கே அப்படி இல்லை.. ரெகுலரா படம் பார்க்கிற கூட்டமே உண்டு. ஒன்றிரண்டு மாதங்கள் நீங்களும் ஆங்கிலப் படங்கள் பார்க்கப் போனீர்கள் என்றால் பல முகங்களை அடிக்கடி தொடர்ந்து பார்க்கலாம். அவர்களில் பலரும் நான் சொன்னது மாதிரி நடமாடும் ‘என்சைக்கிளோபீடியா’வாக இருப்பார்கள்.
இதைவிடவும் ஆச்சரியமான விதயம் ஒன்றுண்டு. நம்ம மக்களுக்கு, படித்தவன் படிக்காதவன் என்ற வேற்றுமையே இல்லாமல் ஒரு நோய் உண்டு; மூத்திரப் பை ரொம்ப வீக்; அங்கிங்கு என்னாதபடி எங்கெங்கும், எப்போதும், தம் கண்களை மூடிக்கொண்டு நம் கண்களையும், மூக்குகளையும் மூட வைப்பதில் மன்னர்கள்தான். ஸ்மார்ட்டாக உடுத்துக்கொண்டு ‘ஓரங்கட்டும்’ எத்தனை படித்த இளைஞர்களிடம் நானே சண்டை போட்டு, திட்டியிருக்கிறேன். நன்றாக செலவு செய்து கட்டிய மூத்திரப்பிரையாக இருந்தாலும் நம் தியேட்டர்களில் அவைகளின் உள்ளே செல்ல நல்ல மன உறுதி இருக்க வேண்டும் - இப்போதும் கூட. ஆனால், ரீகல் தியேட்டரில் பெரிய ஒரு சதுரம்; மேலே கூரை கிடையாது; நான்கு பக்கமும் சுவர்கள்; சுவர்களை ஒட்டி இரண்டு இன்ச் உயரத்தில் ஒரு சிமெண்ட் மேடை; அவ்வளவுதான். ஆனாலும், ஏன் என்று யாருக்கும் தெரியாது - இந்த தியேட்டருக்கு வருபவர்கள் எல்லோருமே ஒரு ஒழுங்கைக் கடைப்பிடித்து, தன் வரிசைக்குக் காத்திருந்து சரியான இடத்தில் சரியாகப் போவது என்பது இதுவரை நான் எங்கும் கண்டதுமில்லை; கேட்டது கூட இல்லை. அதே போலவே எல்லா தியேட்டர்களில் மட்டுமல்ல எங்கெங்கு படிகள் இருக்கின்றனவோ அந்த படிகளின் மூலைகளைப் பார்த்ததும் இந்த வெற்றிலை போடும் ஆட்களுக்கு என்ன ஆகுமோ தெரியவில்லை; என்ன instinct அல்லது reflex என்று தெரியாது - Pavlov-ன் நாய் மாதிரி - மூலைகளில் எச்சில் துப்பும் அந்த ‘இந்தியப் பண்பை’ ரீகலில் பார்க்கவே முடியாது.
தியேட்டரின் கீழ் பகுதியில் மூன்று வகுப்புகள், மேலே இரண்டு பகுதிகள். கீழே உள்ள மூன்று வகுப்புகளின் கட்டணம் எல்லாமே ஒரு ரூபாய்க்கும் குறைவே. 30, 60, 90 பைசா என்ற கணக்கில் டிக்கெட்டுகள் என்று நினைக்கிறேன். நம்ம ஸ்டாண்டர்டுக்கு எப்பவுமே இரண்டாம் வகுப்புதான். ஆனால் அதில் ஒரு தடவை ஒரு பிரச்சனை. இப்போ சன் டீ.வி.யில் வர்ர மாதிரி அப்போ நம்ம தியேட்டரில் ஸ்பெஷல் வாரங்கள் என்று வரும். ஒரு வாரத்தில் ஞாயிற்றுக் கிழமை தவிர மீதி 6 நாட்களுக்கு நாள் ஒன்றுக்கு ஒரு படமாக போடுவார்கள்; ஒரே நடிகர் - ஜெர்ரி லூயிஸ், கிளார்க் கேபிள், நார்மன் விஸ்டம்,…- நடித்த படங்கள், ஒரே கம்பெனியின் படங்கள் - எம்.ஜி.எம்., கொலம்பியா, - என்று இருக்கும். முதல்லேயே ஒழுங்கா ப்ளான் செய்து எந்தெந்த படங்களைப் பார்ப்பது, அதற்குரிய பொருளாதாரப் பிரச்சனைகளை எப்படி எதிர் கொள்வது என்பது போன்ற திட்டங்களைத் தீட்டி - இறுதிப் பரிட்சைக்கு டைம் டேபிள் போடுவது போல் - ரெடியாக வேண்டும். அப்படி போட்டதில் ஒரு தடவை எக்ஸ்ட்ராவாக ஒரு படம் சேர்ந்து விட்டது. பொருளாதாரப் பிரச்சனை மிகுந்த சிக்கலை ஏற்படுத்தியது. இருந்தாலும் போய்விடுவது என்று முடிவெடுத்து தியேட்டர் போனேன். 30 பைசா வரிசை தியேட்டருக்கு வரும் எல்லோரும் பார்க்க முடியும்; மற்ற இரு வகுப்புகளுக்கும் டிக்கெட் கவுண்ட்டர் உள்ளே இருக்கும். அந்த வரிசையில் நிற்கத் தயக்கம். நின்ற ஒருவரிடம் ஏதோ காரணம் சொல்லி டிக்கெட் எடுத்தாகிவிட்டது. உள்ளே விரைந்து போய் கடைசி வரிசையில் இடம் பிடித்து கையோடு கொண்டு போயிருந்த நோட்டை (ஆமா! பிள்ளை படிக்கப் போகிறது என்று அப்பதான் வீட்ல நினைப்பாங்க!) அந்த சீட்டில் வைத்து ரிசர்வ் செய்துவிட்டு வெளியே வந்து, லைட் எல்லாம் அணைத்த பிறகு உள்ளே போனேன். வேறு யாரும் நான் 30 பைசா டிக்கெட்டில் வந்திருப்பது தெரியக்கூடாது என்ற எண்ணம். ஏன்னா, அது ‘தரை டிக்கெட் லெவல்தான்’. அதற்குள் பக்கத்து சீட்டுக்காரர் என் நோட்டைத் திறந்து பார்த்து விட்டார் போலும். நான் போய் உட்கார்ந்ததும், ‘தம்பி, பெரிய கிளாஸ்ல படிக்கிறீங்க; எதுக்கு நீங்கல்லாம் இங்க வர்ரீங்க’ன்னு கேட்டார். அப்போ நான் முதுகலை முதலாண்டு. இப்படிப்பட்ட நல்ல உள்ளங்களை இனியும் நோகடிக்கக் கூடாதென்று முடிவு செய்து அதன் பிறகு அந்த வகுப்பிற்குப் போவதில்லை.
இன்னொரு unique matter என்னன்னா, இடைவேளையில் தியேட்டருக்கு வெளியே செல்ல அனுமதி உண்டு; ஒரு சிகரெட் அட்டையின் பின்பக்கம் ஒரு சீல். அதுதான் அவுட்பாஸ். எதிர்த்தாற்போல் இருந்த, இன்னும் இருக்கும் Zam-Zam டீக்கடையில் (the hottest tea i have ever had in my life) குடிச்சிட்டு வரலாம். சில பேர் முதல் பாதி சினிமாவை ஒரு நாளும், பின் பாதியை அடுத்த நாளும் - ஒரே படத்த இரண்டு instalments-ல் - பார்த்ததுண்டு. ஆனால் இது சில காலமே நடைமுறைப் படுத்தப் பட்டது.
இதில என் தப்பு ஒண்ணுமே இல்லீங்க; இப்படி திருட்டுத்தனமா பாத்த முதல் படம் நல்லா நினைவில் இருக்கிறது. Rank Organization’s ON THE BEAT என்ற Norman Wisdom நடித்த நகைச்சுவைப் படம். நான் போடும் ஒரு கணக்கு: Norman Wisdom + Jerry Lewis = நம்ம நாகேஷ். காதலிக்க நேரமில்லை படத்தில் கூட ‘செல்லப்பா’ தனது ‘ஓஹோ’ என்ற படக்கம்பெனியின் மேசை மேல் Jerry Lewis போட்டோ வைத்திருப்பார். Norman Wisdom ஹாலிவுட் ஆள் இல்லையென்பதால் அதிகமாக நமக்குத் தெரியாத நடிகர். ஆயினும் நாகேஷின் பல படங்களில் இவரது பாதிப்பு இருக்கும். A stitch in time என்ற படத்தின் கதை நெஞ்சில் ஓர் ஆலயம் படத்தின் காமிக் ட்ராக்காக வரும். சரி, நம்ம கதைக்கு வருவோம். படம் பாத்துட்டு, வீட்டுக்குப் போய் அப்பாகூட உக்காந்து இரவுச் சாப்பாடு சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போது படத்தில் உள்ள ஒரு நல்ல காட்சி நினைவுக்கு வர, என்னையறியாமல் சிரித்து விட்டேன். அப்பா என்னவென்று கேட்க ஏதோ காலேஜ்..அது.. இது.. என்று அங்கே ஒரு ரீல் விட்டேன். அவ்வளவு பிடித்த படமே முதல் படமாக அமையாமல் இருந்திருந்தால் நான் அதற்குப் பிறகு இங்கிலீசு படம் பாக்கப் போயிருப்பேனா?
ரொம்ப வருடத்துக்கு இந்தப் பழக்கம் இருந்தது. வேலை பார்க்கும்போது நம்ம ஜாவாவில் போய் மெத்தைக்கு டிக்கெட் எடுத்து படம் பாக்கும்போதெல்லாம் 30 பைசாவில் சினிமா பார்த்த ‘ அந்த நாள் ஞாபகம்…’ வந்திரும். இப்போவெல்லாம் DVD வீட்டுக்கே வந்திடுதே! தியேட்டருக்கு அதிகமா போறதில்லையானாலும் இன்னும் அந்தப் பழக்கம் விடலை…ஏங்க! நீங்களே சொல்லுங்க; இது நல்ல பழக்கமா…இல்ல கெட்ட பழக்கமா…?
Posted by தருமி at 10/07/2007 09:41:00 AM 13 comments
Labels: மலரும் நினைவுகள்
Tuesday, October 2, 2007
மலரும் நினைவுகள்
வணக்கம்
இது வரை இங்கு இடப்பட்டுள்ள இடுகைகளைப் பார்த்துப் படித்து பின்னூட்டமும் இட்டிருக்கிறேன். எனக்கும் ஒரு இடுகை இட வேண்டுமென்று நெடு நாள் ஆசை. ஆனால் இதுவரை பதியப்பட்டுள்ள இடுகைகளைக் காணும் போது எனது இடுகை தொடர்பில்லாமல் இருக்குமே என எண்ணித் தள்ளிப் போட்டுக்கொண்டே வந்தேன். ஆனால் ஒரு வார காலமாக யாருமே எழுதவில்லை. உடனே ஏதாவது எழுத வேண்டுமே என்று இப்போது எழுதிவிட்டேன். அவ்வளவு தான்
---------------------------------------------------------------------------
நான் தஞ்சையிலிருந்து Third form படித்து விட்டு மதுரைக்கு மாற்றலாகி (??) Nineth standard படிப்பதற்கு வந்து சேர்ந்தேன். 1963ம் ஆண்டு மதுரையில் அடி எடுத்து வைத்தேன். 1972ம் ஆண்டு வரை மதுரையில் படித்தேன்.
கோசாகுளம் புதூர் எனப்படும் கே.புதூரில், 3, மாரியம்மன் கோயில் தெரு என்னும் முகவரியில் வசித்தோம். ஒரு சிறிய வீடு. முன் பக்கம் நல்ல திறந்த வெளி. மண் ரோடு. அமைதியான சூழ்நிலை. வீட்டின் முன்புறம் ஒரு வேப்ப மரம். அதனில் கட்டப்பட்டிருக்கும் கன்றுடன் கூடிய பசு. பின்புறம் ஒரு தோட்டம் எனச் சொல்லப்பட்ட வெற்றிடம். ஹைஜம்ப், லாங்ஜம்ப், சடுகுடு, கிட்டிப்புள், எனப் பல விளையாட்டுகள் விளையாடிய இடம்.
வீட்டின் முன்பக்க அறையில் ஒரு சிறு மளிகைக் கடை வைத்திருந்தோம். அது காய்கறிக் கடையோடு இணைந்த மளிகைக்கடை. வியாபாரம் நன்றாகவே நடந்தது. காலை 4 மணிக்கு நானும் என் தந்தையும் சைக்கிளில் சென்று மீனாட்சி அம்மன் கோவில் அருகே இருந்த சென்ட்ரல் மார்க்கெட்டில் இருந்து அனைத்துக் காய்கறிகளையும் மொத்த விலையில் வாங்கிக் கொண்டு வருவோம். கீழ மாசி வீதியிலும் வீதி முழுவதும் உள்ள தேங்காய்க் கடைகள், பழக்கடைகள், அனைத்திலும் கொள்முதல் செய்து, புதூர் வரும் போது காலை 6 மணி ஆகிவிடும். காலையிலேயே தினந்தினம் புதுசு புதுசா காய்கறிகள் வியாபாரம் களை கட்டும். ஏழு ஏழரைக்கெல்லாம் முடிச்சிட்டு மளிகைக் கடையில் உக்காந்தா எட்டரை வரைக்கும் இருப்பேன். அப்புறம் அவசர அவசரமா எல்லா வேலையும் முடிச்சிட்டு பள்ளி செல்லும் பாலகன் நானே - பள்ளிக்கூடம் போகனும்.
வீட்டிலே இருந்து நாங்க நண்பர்கள் புடை சூழ நடந்ந்ந்ந்ந்ந்ந்ந்ந்தேதேதேதே தல்லாகுளம் பெருமாள் கோயில் அருகே இருக்கும் அமெரிக்கன் கல்லூரி உயர் நிலைப்பள்ளிக்குச் செல்வோம். பள்ளிக்குச் செல்லும் வழி இரண்டு உண்டு. புதூர் பஸ் ஸ்டாண்டில் அனைவரும் கூடி அரட்டை அடித்துவிட்டு அழகர் கோயில் மெயின் ரோட்டிலேயே நடந்து ஐடிஐ, ரேஸ்கோர்ஸ், அவுட்போஸ்ட், தல்லாகுளம் என நடந்து செல்வதற்குள், வீடு, பள்ளி, ஊர், மாவட்டம், மாநிலம், தேசம், உலகம் என அத்தனை இடங்களைப் பற்றியும், நிகழ்வுகள் பற்றியும், பேசிப் பேசி, விவாதித்து, ஆமோதிக்கும் கட்சி, மறுக்கும் கட்சி எனப் பட்டி மன்றம் நடத்தி ( அதில் சில நண்பர்கள் பார்வையாளர்களே) - பள்ளி சென்ற நாட்கள் - இன்பமாகக் கவலையின்றி கழிந்த நாட்கள் - வாழ்க்கையின் சுவையான நாட்கள் - திரும்பக் கிடைக்காத நாட்கள் - அசை போட்டு ஆனந்திக்கும் நாட்கள். கவலைப் படுகின்ற சில நாட்களில் ஆறுதலுக்கு நட்பே கை கொடுக்கும். மேலும் பெருமாள் கோவிலுக்கு எதிரில் உள்ள இரட்டைப் பிள்ளளயாரிடம் சொல்லி விட்டால் கவலைகள் பறந்து போகும் - மறந்து போகும்.
பள்ளிக்குச் சென்ற மற்ற வழி - வீட்டிற்குப் பின்புறம் இருந்த பெரிய கம்மாக்கரை வழியா நடந்து போனது. கம்மாயிலே இடுப்பளவு தண்ணி இருந்த காலத்திலே குளிக்கிறோம்னு சொல்லி கூத்தடிச்ச காலங்கள் உண்டு. தண்ணிக்குள்ளே வந்து கோமணத்தே உருவிட்டுப் போய்டுவானுங்க! . காலைலே சுகமா கம்மாக் கரையிலே பசங்களோட அப்பிடியே வெளீயே போய்ட்டு கம்மாலெயெ காலைக் கழுவிட்டு வந்த சுகம் இப்போ பெரிய வீட்லே WC டாய்லெட்லே கிடைக்குறதா ??
தற்போதைய DRO காலனி, சர்வேயர் காலனி ன்னு கம்மா பூரா வீடுகளா மாறிடிச்சி. கம்மாக்கரையிலேயே நடந்து நத்தம் ரோட்டைப் பிடிச்சா - கலக்டர் பங்களா, ரிசர்வ் லைன், எஸ்பி பங்களா, பிடபுள்யூடி ஈஈ பங்களா, கெஸ்டவுசுன்னு பல பங்களாக்கள் கடந்து அவுட்போஸ்ட் வந்து மெயின் ரோட்லே ஜாயின் பண்ணுவோம்.
அப்பல்லாம் ஏதாவது அதிக ஆசைப்பட்டு வீட்லே கேட்டா, அப்பா வந்து "பெரிய சேஷய்யன்னு மனசிலே நினைப்பா" ன்னு திட்டுவாங்க. யாரந்த சேஷய்யன்னு ரொம்ப நாள் தெரியாம இருந்திச்சி. அப்புறம் தான் ஒரு நா அவர் தான் பெரிய, மதுர ஜில்லாக் கலெக்டர்னு தெரிஞ்சுது. (T.N.Seshan).
சில சமயம் பேச்சிலே சண்டை வந்து காய் விட்டுட்டு பசங்களெப் பிரிஞ்சு நாங்க ரெண்டு மூணு பேரு நத்தம் ரோட்லெந்து பிரிஞ்சு சொக்கிகுளம், பீபீகுளம், லேடி டோக் காலேஜ், ஓசிபிஎம் வழியா தல்லாகுளம் போவோம். சொக்கிகுளத்திலே வடமலையான் பங்களா, பிடிஆர் பங்களா, டிவிஎஸ் பங்களான்னு பெரீஈஈஈஈஈஈய வீடெல்லாம் வேடிக்கை பாத்துட்டே போவோம். பள்ளிக்கூடம் போனாப் போவோம் இல்லேன்னா தமுக்கம் மைதானம் சுவர் ஏறிக் குதிச்சுப் போய் சாயந்திரம் வரைக்கும் அங்கேயே இருப்போம். சாயந்திரம் அப்பிடியே வந்தோம்னா, பசங்க எல்லாம் காலைலேந்து காணோமேன்னு அலை பாஞ்சுகிட்டுருப்பானுங்க. அப்பிடி கெத்தா வந்து, சேந்து வீடு போவோம். திட்றவன் திட்டுவான். அழுவறவன் அழுவான். அப்புறம் பழம் விட்டுடுவோம்.
நண்பர்களில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த - சிவானந்தம், பவானந்தம்,
நித்யானந்தம், பரமானந்தம் ஆகியோர் நல்ல நண்பர்கள். மதுரை காமராஜ் பல்கலைக் கழகத்திலும், மீன் வளத்துறையிலும், கனரா வங்கியிலுமாக பணிக்குச் சென்றவர்கள். நீண்ட காலமாக தொடர்பு விட்டுப் போய் விட்டது. மற்ற நண்பர்கள் மின்வாரியத்திலும் பொதுப்பணித்துறையிலுமாக பணிக்குச் சென்றார்கள்.
மூன்றாண்டு காலம் பள்ளி வாழ்க்கை இன்பமயமாகச் சென்றது. XIth standard வரை அங்கு படித்தேன். அக்காலக் கட்டத்தில் தான் பாண்டியன் ஹோட்டல் அஸ்திவாரம் போட்டு செங்கல் செங்கலாக உயர்ந்தது. அதற்கு முன்னால் சர்க்கியூட் ஹவுஸ் மட்டும் தான் இருந்தது.
பள்ளியில் தலைமையாசிரியராக அந்தக் காலத்தில் அமெரிக்கா சென்று வந்த திரு சுந்தர்ராஜ் இருந்தார். எங்களுக்கு ஆங்கிலப் பாடம் நடத்துவார். பொறுமையின் திலகம். கணித ஆசிரியராக திரு நரசிம்மன் ஒன்பதாம் வகுப்பிலே முழு ஆண்டுத்தேர்விலே 100 மதிப்பெண் கொடுத்து பத்தாம் வகுப்பினிலே அல்ஜீப்ரா கணிதம் எடுக்க வைத்து கணிதத்தின் மேல் ஒரு காதலை ஏற்படுத்தியவர். தமிழாசான்களாக, திரு நடராஜன், கோவிந்தன், அலங்காரம் என்னும் பெருமக்கள் கற்றுத்தந்த தமிழ்தான் இன்றைக்கும் சிறிதளவாவது தமிழ் பேச வைக்கிறது. திரு அலங்காரம் அவர்கள் நடத்திய ந-சூ (நன்னூல் சூத்திரம்) மறக்க முடியுமா - தமிழிலக்கணத்தை கரைத்துக் குடிக்க வைத்தவர். மதுரைத் தமிழ்ச் சங்கத்தில் வித்வான் பட்டம் பெற்றவர்கள். விஞ்ஞான ஆசிரியர் திரு ஜான்சன் சுவாமிப் பிள்ளை. பாடம் நடத்தும் பொழுது திடீரென "பள்ளிதனில் தூங்கியவன் கல்வி இழந்தான்" என்று கூறினாரென்றால் - எவனோ ஒரு மாணவன் தூங்கிக்கொண்டிருக்கிறான் என்று பொருள். சக மாணவர்கள் அக்கம் பக்கம் பார்த்து அவனை எழுப்பி விடுவர். ஆசிரியரோ கவலைப் படாமல் தொடர்ந்து பாடம் நடத்துவார். சமூக இயல் ஆசிரியர் திரு Eddie. உடற் பயிற்சி ஆசிரியர் திரு டெய்லர். ஹிந்தி ஆசிரியர் திரு சீனிவாசன்.
அக்கால கட்டத்தில் தான் இந்தி எதிர்ப்பு பலமாக இருந்த காலம். காளிமுத்து, சீனிவாசன் போன்றவர்கள் கல்லூரிகளில் படித்த காலம் - சட்ட எரிப்பு நடத்திய காலம். பக்தவக்சலம் முதல்வராகவும் லால் பகதூர் சாஸ்திரி பிரதமராகவும் இருந்த காலம். இன்றும் இந்தி தெரியாமல் துயரப் படுவதற்கு வழி வகுத்த காலம். முதல் மந்திரியையும், பிரதம மந்திரியையும் எதிர்த்து எழுப்பிய கோஷங்கள் இன்றும் நினைவிலிருக்கின்றன.
தமுக்கம் மைதானம், அடுத்துள்ள பூங்கா, காந்தி மியூசியம், ரேஸ்கோர்ஸ் மைதானம் இவை தான் எங்களது பொழுதுபோக்கும் இடங்கள்.
பள்ளியின் அருகிலேயே தமுக்கம் மைதானத்தின் சுற்றுச் சுவர் இருந்தது. ஏறிக் குதித்து சாப்பிட அங்கு செல்வோம் - அனைத்து தூக்குச் சட்டிகளும் திறக்கப்பட்டு கூட்டாஞ்சோறு உண்ணுவோம். வெள்ளைச் சாமி உதயணன் என்ற வகுப்புத் தோழர்களுடன் அடித்த கூத்துகள் மறக்க முடியாதவை.
தொடர்கிறேன் அடுத்த இடுகையாக
அன்புடன் ..... சீனா
Posted by cheena (சீனா) at 10/02/2007 08:53:00 AM 26 comments
Labels: சீனா, மலரும் நினைவுகள்