Tuesday, October 2, 2007

மலரும் நினைவுகள்

அன்பு நண்பர்களே !
வணக்கம்
இது வரை இங்கு இடப்பட்டுள்ள இடுகைகளைப் பார்த்துப் படித்து பின்னூட்டமும் இட்டிருக்கிறேன். எனக்கும் ஒரு இடுகை இட வேண்டுமென்று நெடு நாள் ஆசை. ஆனால் இதுவரை பதியப்பட்டுள்ள இடுகைகளைக் காணும் போது எனது இடுகை தொடர்பில்லாமல் இருக்குமே என எண்ணித் தள்ளிப் போட்டுக்கொண்டே வந்தேன். ஆனால் ஒரு வார காலமாக யாருமே எழுதவில்லை. உடனே ஏதாவது எழுத வேண்டுமே என்று இப்போது எழுதிவிட்டேன். அவ்வளவு தான்
---------------------------------------------------------------------------

நான் தஞ்சையிலிருந்து Third form படித்து விட்டு மதுரைக்கு மாற்றலாகி (??) Nineth standard படிப்பதற்கு வந்து சேர்ந்தேன். 1963ம் ஆண்டு மதுரையில் அடி எடுத்து வைத்தேன். 1972ம் ஆண்டு வரை மதுரையில் படித்தேன்.

கோசாகுளம் புதூர் எனப்படும் கே.புதூரில், 3, மாரியம்மன் கோயில் தெரு என்னும் முகவரியில் வசித்தோம். ஒரு சிறிய வீடு. முன் பக்கம் நல்ல திறந்த வெளி. மண் ரோடு. அமைதியான சூழ்நிலை. வீட்டின் முன்புறம் ஒரு வேப்ப மரம். அதனில் கட்டப்பட்டிருக்கும் கன்றுடன் கூடிய பசு. பின்புறம் ஒரு தோட்டம் எனச் சொல்லப்பட்ட வெற்றிடம். ஹைஜம்ப், லாங்ஜம்ப், சடுகுடு, கிட்டிப்புள், எனப் பல விளையாட்டுகள் விளையாடிய இடம்.

வீட்டின் முன்பக்க அறையில் ஒரு சிறு மளிகைக் கடை வைத்திருந்தோம். அது காய்கறிக் கடையோடு இணைந்த மளிகைக்கடை. வியாபாரம் நன்றாகவே நடந்தது. காலை 4 மணிக்கு நானும் என் தந்தையும் சைக்கிளில் சென்று மீனாட்சி அம்மன் கோவில் அருகே இருந்த சென்ட்ரல் மார்க்கெட்டில் இருந்து அனைத்துக் காய்கறிகளையும் மொத்த விலையில் வாங்கிக் கொண்டு வருவோம். கீழ மாசி வீதியிலும் வீதி முழுவதும் உள்ள தேங்காய்க் கடைகள், பழக்கடைகள், அனைத்திலும் கொள்முதல் செய்து, புதூர் வரும் போது காலை 6 மணி ஆகிவிடும். காலையிலேயே தினந்தினம் புதுசு புதுசா காய்கறிகள் வியாபாரம் களை கட்டும். ஏழு ஏழரைக்கெல்லாம் முடிச்சிட்டு மளிகைக் கடையில் உக்காந்தா எட்டரை வரைக்கும் இருப்பேன். அப்புறம் அவசர அவசரமா எல்லா வேலையும் முடிச்சிட்டு பள்ளி செல்லும் பாலகன் நானே - பள்ளிக்கூடம் போகனும்.

வீட்டிலே இருந்து நாங்க நண்பர்கள் புடை சூழ நடந்ந்ந்ந்ந்ந்ந்ந்ந்தேதேதேதே தல்லாகுளம் பெருமாள் கோயில் அருகே இருக்கும் அமெரிக்கன் கல்லூரி உயர் நிலைப்பள்ளிக்குச் செல்வோம். பள்ளிக்குச் செல்லும் வழி இரண்டு உண்டு. புதூர் பஸ் ஸ்டாண்டில் அனைவரும் கூடி அரட்டை அடித்துவிட்டு அழகர் கோயில் மெயின் ரோட்டிலேயே நடந்து ஐடிஐ, ரேஸ்கோர்ஸ், அவுட்போஸ்ட், தல்லாகுளம் என நடந்து செல்வதற்குள், வீடு, பள்ளி, ஊர், மாவட்டம், மாநிலம், தேசம், உலகம் என அத்தனை இடங்களைப் பற்றியும், நிகழ்வுகள் பற்றியும், பேசிப் பேசி, விவாதித்து, ஆமோதிக்கும் கட்சி, மறுக்கும் கட்சி எனப் பட்டி மன்றம் நடத்தி ( அதில் சில நண்பர்கள் பார்வையாளர்களே) - பள்ளி சென்ற நாட்கள் - இன்பமாகக் கவலையின்றி கழிந்த நாட்கள் - வாழ்க்கையின் சுவையான நாட்கள் - திரும்பக் கிடைக்காத நாட்கள் - அசை போட்டு ஆனந்திக்கும் நாட்கள். கவலைப் படுகின்ற சில நாட்களில் ஆறுதலுக்கு நட்பே கை கொடுக்கும். மேலும் பெருமாள் கோவிலுக்கு எதிரில் உள்ள இரட்டைப் பிள்ளளயாரிடம் சொல்லி விட்டால் கவலைகள் பறந்து போகும் - மறந்து போகும்.

பள்ளிக்குச் சென்ற மற்ற வழி - வீட்டிற்குப் பின்புறம் இருந்த பெரிய கம்மாக்கரை வழியா நடந்து போனது. கம்மாயிலே இடுப்பளவு தண்ணி இருந்த காலத்திலே குளிக்கிறோம்னு சொல்லி கூத்தடிச்ச காலங்கள் உண்டு. தண்ணிக்குள்ளே வந்து கோமணத்தே உருவிட்டுப் போய்டுவானுங்க! . காலைலே சுகமா கம்மாக் கரையிலே பசங்களோட அப்பிடியே வெளீயே போய்ட்டு கம்மாலெயெ காலைக் கழுவிட்டு வந்த சுகம் இப்போ பெரிய வீட்லே WC டாய்லெட்லே கிடைக்குறதா ??

தற்போதைய DRO காலனி, சர்வேயர் காலனி ன்னு கம்மா பூரா வீடுகளா மாறிடிச்சி. கம்மாக்கரையிலேயே நடந்து நத்தம் ரோட்டைப் பிடிச்சா - கலக்டர் பங்களா, ரிசர்வ் லைன், எஸ்பி பங்களா, பிடபுள்யூடி ஈஈ பங்களா, கெஸ்டவுசுன்னு பல பங்களாக்கள் கடந்து அவுட்போஸ்ட் வந்து மெயின் ரோட்லே ஜாயின் பண்ணுவோம்.

அப்பல்லாம் ஏதாவது அதிக ஆசைப்பட்டு வீட்லே கேட்டா, அப்பா வந்து "பெரிய சேஷய்யன்னு மனசிலே நினைப்பா" ன்னு திட்டுவாங்க. யாரந்த சேஷய்யன்னு ரொம்ப நாள் தெரியாம இருந்திச்சி. அப்புறம் தான் ஒரு நா அவர் தான் பெரிய, மதுர ஜில்லாக் கலெக்டர்னு தெரிஞ்சுது. (T.N.Seshan).

சில சமயம் பேச்சிலே சண்டை வந்து காய் விட்டுட்டு பசங்களெப் பிரிஞ்சு நாங்க ரெண்டு மூணு பேரு நத்தம் ரோட்லெந்து பிரிஞ்சு சொக்கிகுளம், பீபீகுளம், லேடி டோக் காலேஜ், ஓசிபிஎம் வழியா தல்லாகுளம் போவோம். சொக்கிகுளத்திலே வடமலையான் பங்களா, பிடிஆர் பங்களா, டிவிஎஸ் பங்களான்னு பெரீஈஈஈஈஈஈய வீடெல்லாம் வேடிக்கை பாத்துட்டே போவோம். பள்ளிக்கூடம் போனாப் போவோம் இல்லேன்னா தமுக்கம் மைதானம் சுவர் ஏறிக் குதிச்சுப் போய் சாயந்திரம் வரைக்கும் அங்கேயே இருப்போம். சாயந்திரம் அப்பிடியே வந்தோம்னா, பசங்க எல்லாம் காலைலேந்து காணோமேன்னு அலை பாஞ்சுகிட்டுருப்பானுங்க. அப்பிடி கெத்தா வந்து, சேந்து வீடு போவோம். திட்றவன் திட்டுவான். அழுவறவன் அழுவான். அப்புறம் பழம் விட்டுடுவோம்.

நண்பர்களில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த - சிவானந்தம், பவானந்தம்,
நித்யானந்தம், பரமானந்தம் ஆகியோர் நல்ல நண்பர்கள். மதுரை காமராஜ் பல்கலைக் கழகத்திலும், மீன் வளத்துறையிலும், கனரா வங்கியிலுமாக பணிக்குச் சென்றவர்கள். நீண்ட காலமாக தொடர்பு விட்டுப் போய் விட்டது. மற்ற நண்பர்கள் மின்வாரியத்திலும் பொதுப்பணித்துறையிலுமாக பணிக்குச் சென்றார்கள்.

மூன்றாண்டு காலம் பள்ளி வாழ்க்கை இன்பமயமாகச் சென்றது. XIth standard வரை அங்கு படித்தேன். அக்காலக் கட்டத்தில் தான் பாண்டியன் ஹோட்டல் அஸ்திவாரம் போட்டு செங்கல் செங்கலாக உயர்ந்தது. அதற்கு முன்னால் சர்க்கியூட் ஹவுஸ் மட்டும் தான் இருந்தது.

பள்ளியில் தலைமையாசிரியராக அந்தக் காலத்தில் அமெரிக்கா சென்று வந்த திரு சுந்தர்ராஜ் இருந்தார். எங்களுக்கு ஆங்கிலப் பாடம் நடத்துவார். பொறுமையின் திலகம். கணித ஆசிரியராக திரு நரசிம்மன் ஒன்பதாம் வகுப்பிலே முழு ஆண்டுத்தேர்விலே 100 மதிப்பெண் கொடுத்து பத்தாம் வகுப்பினிலே அல்ஜீப்ரா கணிதம் எடுக்க வைத்து கணிதத்தின் மேல் ஒரு காதலை ஏற்படுத்தியவர். தமிழாசான்களாக, திரு நடராஜன், கோவிந்தன், அலங்காரம் என்னும் பெருமக்கள் கற்றுத்தந்த தமிழ்தான் இன்றைக்கும் சிறிதளவாவது தமிழ் பேச வைக்கிறது. திரு அலங்காரம் அவர்கள் நடத்திய ந-சூ (நன்னூல் சூத்திரம்) மறக்க முடியுமா - தமிழிலக்கணத்தை கரைத்துக் குடிக்க வைத்தவர். மதுரைத் தமிழ்ச் சங்கத்தில் வித்வான் பட்டம் பெற்றவர்கள். விஞ்ஞான ஆசிரியர் திரு ஜான்சன் சுவாமிப் பிள்ளை. பாடம் நடத்தும் பொழுது திடீரென "பள்ளிதனில் தூங்கியவன் கல்வி இழந்தான்" என்று கூறினாரென்றால் - எவனோ ஒரு மாணவன் தூங்கிக்கொண்டிருக்கிறான் என்று பொருள். சக மாணவர்கள் அக்கம் பக்கம் பார்த்து அவனை எழுப்பி விடுவர். ஆசிரியரோ கவலைப் படாமல் தொடர்ந்து பாடம் நடத்துவார். சமூக இயல் ஆசிரியர் திரு Eddie. உடற் பயிற்சி ஆசிரியர் திரு டெய்லர். ஹிந்தி ஆசிரியர் திரு சீனிவாசன்.

அக்கால கட்டத்தில் தான் இந்தி எதிர்ப்பு பலமாக இருந்த காலம். காளிமுத்து, சீனிவாசன் போன்றவர்கள் கல்லூரிகளில் படித்த காலம் - சட்ட எரிப்பு நடத்திய காலம். பக்தவக்சலம் முதல்வராகவும் லால் பகதூர் சாஸ்திரி பிரதமராகவும் இருந்த காலம். இன்றும் இந்தி தெரியாமல் துயரப் படுவதற்கு வழி வகுத்த காலம். முதல் மந்திரியையும், பிரதம மந்திரியையும் எதிர்த்து எழுப்பிய கோஷங்கள் இன்றும் நினைவிலிருக்கின்றன.

தமுக்கம் மைதானம், அடுத்துள்ள பூங்கா, காந்தி மியூசியம், ரேஸ்கோர்ஸ் மைதானம் இவை தான் எங்களது பொழுதுபோக்கும் இடங்கள்.
முழங்கால் வரை நீண்ட டிரவ்சர்( வளர்ற புள்ளே - நல்லாத் தையுங்க) - காமராஜர் மாதிரி முழங்கை வரை தொள தொள சட்டை - ஒரு கையில் பை நிறைய புத்தகங்கள் - நோட்டுகள் - எப்போதும் கசியும் ஒரு பவுண்டன் பேனா - ஜாமெட்ரி பாக்ஸ் - இத்துடன் ஒரு பெரிய அலுமினிய / எவெர்சில்வர் தூக்குச் சட்டி. அதனுள் தயிர் சாதம், எலுமிச்சை சாதம், சாம்பார் சாதம், புளி சாதம் என வகை வகையாக தினத்துக்கொன்று என பலவகை சாதங்கள் - உடன் துவையல் ஊறுகாய் வெஞ்சனம் என - படிக்குற புள்ளே - பாவம்னு - அம்மா ஆசை ஆசையாக கட்டிக்குடுக்கும் மதிய சாப்பாடு - மறுபடி சிறு பையனாக மாறி பள்ளி செல்ல வேண்டும்.

பள்ளியின் அருகிலேயே தமுக்கம் மைதானத்தின் சுற்றுச் சுவர் இருந்தது. ஏறிக் குதித்து சாப்பிட அங்கு செல்வோம் - அனைத்து தூக்குச் சட்டிகளும் திறக்கப்பட்டு கூட்டாஞ்சோறு உண்ணுவோம். வெள்ளைச் சாமி உதயணன் என்ற வகுப்புத் தோழர்களுடன் அடித்த கூத்துகள் மறக்க முடியாதவை.

தொடர்கிறேன் அடுத்த இடுகையாக

அன்புடன் ..... சீனா

26 Comments:

குமரன் (Kumaran) said...

மலரும் நினைவுகளை அருமையா தொகுத்திருக்கீங்க ஐயா. இப்ப தான் கே.புதூர் பெரிய ஊரா இருக்கு. நான் சின்னப்பையனா இருக்கிறப்ப அப்ப தான் வளர்ந்து வந்தது. நீங்கள் 1972க்கு முன்னாடின்னு சொல்றீங்க. அப்பவே பெரிசா தான் இருந்ததா?

கே.புதூர்ல இருந்து தல்லாகுளம் வரைக்கும் நடந்து போய் படிச்சுட்டு வருவீங்களா? நானெல்லாம் டி.எம்.கோர்ட்டில இருந்து சௌராஷ்ட்ர மேல்நிலைப்பள்ளிக்கு நடந்து போனதையே பெருசா நெனைச்சுக்கிட்டு இருக்கேன். :-)

பள்ளிக்கூடத்துக்குப் போன வழியெல்லாம் நல்லா சொல்லியிருக்கீங்க. நிறைய இடம் கேள்விபட்டிருக்கேன். ஆனா போனதும் பாத்ததும் இல்லை.

ஆசிரியர்கள் பெயர்களை எல்லாம் எப்படி நினைவுல வச்சிருக்கீங்க. வியப்பு தான். ரொம்ப கஷ்டப்பட்டா என்னால நாலு அஞ்சு வாத்தியார் பெயருங்க சொல்ல முடியும்.

நீங்க மட்டும் பள்ளிக்கூடத்துக்குப் போகாம உங்களோட சேத்து எங்களையும் கூட்டிக்கிட்டுப் போயிட்டு வந்திட்டீங்க.

cheena (சீனா) said...

நன்றி நண்ப, குமர,

கே.புதூர் 1963-1972 வாசம். அப்போது வளரவில்லை - சிற்றூராகத்தான் இருந்தது. இப்போதைய அசுர வளர்ச்சி இல்லை.
இன்னும் நிறைய நினைவுகள் உண்டு. குறிப்புகள் எழுதும் பழக்கம் இன்று வரை இல்லை - அதனால் நினைத்து நினைத்து நேரிடையாக தட்டச்சு செய்கிறேன். அதிக நேரம் எடுக்கிறது. பல செய்திகள் விட்டுப்போகின்றன. என்ன செய்வது.

உண்மைத்தமிழன் said...

கே.புதூருக்கு நான் 1982-ல் வந்தபோது முக்கால்வாசி இடங்கள் பொட்டல் காடாகத்தான் காட்சியளித்தன. பின்புதான் அசுர வேகம்..

சீனு ஸார்.. யோசித்து யோசித்து என்றாலும் பரவாயில்லை. எதையும் விடாமல் தொடருங்கள்..

cheena (சீனா) said...

நன்றி உன்மைத்தமிழரே - எனது பெயர் நட்பு வட்டத்தில் "சீனா" என்பதே - Cheena - avloothaan

தருமி said...

சீனா,
//அக்காலக் கட்டத்தில் தான் பாண்டியன் ஹோட்டல் அஸ்திவாரம் போட்டு செங்கல் செங்கலாக உயர்ந்தது. //

அப்போஅதற்கு எதிர்த்தாற்போல் இருக்கும் இப்போதைய பல்கலைக் கல்லூரியில்தான் மதுரைப் பல்கலைக் கழகம் நடந்து வந்தது. என் முதுகலை வகுப்புகள் அங்கு வாரமிருமுறை நடக்கும். பாண்டியன் ஹோட்டல் வளர்ந்துவரும்போது அதை backgroundஆக வைத்து நண்பர்கள் பல்கலைக் கழகத்து மொட்டை மாடியில் நின்று படம் எடுத்துக் கொண்டோம். தேடினால் கிடைக்கும் என்று நினைக்கிறேன்.

அதென்ன பள்ளிக்கூடம் போகச்சொன்னால் சொக்கிகுளம் அது இதுன்னு ஊரையே சுத்திக்கிட்டு போயிருக்கீங்க...!

தருமி said...

சீனா,
முதல் பதிவு. அதற்கு முதலில் வாழ்த்தும் வரவேற்பும் ...

தொடருங்கள்...

cheena (சீனா) said...

நன்றி நண்பர் தருமி - வாழ்த்துக்கும் வரவேற்புக்கும் - பழைய புகைப்படத்தைத் தேடுங்கள். பள்ளி செல்லும் போது ஊர் சுற்றுவதில்லை. விவாதங்களில் மனம் வேறுபடும்போது நண்பர் குழுவிலிருந்து விலகி பள்ளி செல்லும் பாதை மாறும் - அன்று பள்ளி பெரும்பாலும் சென்றதாக நினைவு இல்லை. தமுக்கம் மைதானமே கதியெனக் கிடப்போம்.

மா.கலை அரசன் said...

சீனா சார் தங்களின் மலரும் நினைவுகளை படிக்கும் போது மதுரைக்கு நேரில் விஜயம் செய்த உணர்வு ஏற்படுகின்றது.

நினைவுகளை சொன்ன விதம் நன்று.

உங்களின் மலரும் நினைவுகளின் அடுத்த பகுதியை படிக்க ஆவலுடன் காத்து இருக்கின்றேன்.

வாழ்த்துக்கள்.

cheena (சீனா) said...

நன்றி கலை அரசன் - சீக்கிரமே அடுத்த இடுகையும் இடுகிறேன்

மெளலி (மதுரையம்பதி) said...

சீனா சார், இன்றுதான் இந்த பதிவினைப் படித்தேன். கலக்கல்.

மங்களூர் சிவா said...

//
நான் தஞ்சையிலிருந்து Third form படித்து விட்டு மதுரைக்கு மாற்றலாகி (??) Nineth standard படிப்பதற்கு வந்து சேர்ந்தேன்.
//
டபுள் ப்ரொமோஷன் கேள்வி பட்டிருக்கோம் இது என்ன இத்தனை க்ளாஸ் ப்ரொமோஷன்??

//
இத்தனை ஆசிரியர்கள் பெயர்களை எப்படி நினைவுல வச்சிருக்கீங்க. வியப்பு தான்.
//

//
தருமி said...
அதென்ன பள்ளிக்கூடம் போகச்சொன்னால் சொக்கிகுளம் அது இதுன்னு ஊரையே சுத்திக்கிட்டு போயிருக்கீங்க...!
//
ஹி ஹிஹி

ஜூனியர் எங்களை மாதிரியேதான் சீனியர்லாம் இருந்திருக்கீங்க.

மங்களூர் சிவா said...

இந்த பதிவை படிக்கும் போது மதுரைக்கு நேரில் விஜயம் செய்த உணர்வு ஏற்படுகின்றது.

மகிழ்சி.

ஜீவி said...

//சீக்கிரமே அடுத்த இடுகையும் இடுகிறேன்//

சீனா சார்!

மதுரை மறக்கமுடியாத ஊர் தான். உங்கள் மலரும் நினைவுகளைப் படித்து, மதுரையைப் பற்றிய சில தகவல்களை அறிந்தோம். எப்பொழுதுமே அந்தக்கால நினைவுகளை அசைபோடுவது சுவாரஸ்யம் தான். அதுவும் இன்றைய தலைமுறைக்கு பழைய விஷயங்களைச் சொல்லும் பொழுது "உனக்குத் தெரியுமா, அன்று அப்படி நடந்ததாக்கும்!" என்று
அவர்கள் அறியாத செய்திகளைச் சொல்லும் பொழுது ஒரு கதை சொல்கிற மாதிரி சுவாரஸ்யம் கூடும் என்பது உண்மைதான்.

நிறைய எழுதுங்கள் சார்!

சதங்கா (Sathanga) said...

சீனா,

//ஒரு சிறிய வீடு. முன் பக்கம் நல்ல திறந்த வெளி. மண் ரோடு. அமைதியான சூழ்நிலை. வீட்டின் முன்புறம் ஒரு வேப்ப மரம். அதனில் கட்டப்பட்டிருக்கும் கன்றுடன் கூடிய பசு. பின்புறம் ஒரு தோட்டம் எனச் சொல்லப்பட்ட வெற்றிடம். //

ஆஹா என்ன ஒரு சூழல். இதைப் பற்றி, குறிப்பா 'தோட்டம்' பற்றி நான் எழுதிய கவிதை, நேரம் கிடைக்கும்போது வாசித்துச் சொல்லுங்கள்.

பள்ளிக்கு மட்டம் போட்ட நாட்கள் நிறைய இருக்கும் போல ... இருந்தும் அத்தனை ஆசிரியர்களையும், அவர்கள் பெயர்களையும் நினைவில் வைத்து (குறிப்பு எழுதி வைக்காமல்) எழுதியது வியக்க வைக்கிறது. குமரன் சொல்லியது போல எனக்கும் சில ஆசிரியர்களின் பெயர்களே நினைவில் இருக்கிறது. அதில் மறக்க முடியாத ஒரு தமிழாசிரியர், நீங்கள் சொல்லியது போல எனக்கும் தமிழ் ஆர்வம் ஏற்படக் காரணமாயிருந்தவர்.

திருமங்கலம், PKN, 1985 வாக்கில், தமிழாசான் ஃபாதர் ஜமால், இசுலாமியர் என்றாலும், இவர் கம்பராமாயணம் எடுத்தால்

கம்பன் கைகட்டி நின்று
கதை மட்டும் கேட்பான் !

வெறும் புகழ்ச்சியில்லை, உண்மை.

அருமையான அசைபோட வைக்கும் பதிவு. தொடர்ந்து எழுதுங்கள்.

PPattian said...

மதுரை குறித்து சிறப்பா எழுதி இருக்கீங்க. எனக்கு மதுரை பத்தி அவ்வளவா தெரியாதுன்னாலும், சுவாரசியமா இருக்கு.

நான் கூட கொஞ்ச காலம் கிலோமீட்டர் கணக்கில நடந்து ஸ்கூல் போனது உண்டு. காட்டு வழி, இல்லைன்னா மெயின் ரோடுன்னு ரெண்டு வழி எங்களுக்கும் இருந்தது. நாம பெரும்பாலும் காட்டு வழிதான்....

cheena (சீனா) said...

வருகை புரிந்த அன்பர்கள் மதுரையம்பதி, சிவா, ஜீவி, சதங்கா, புபுட்டியன் அனைவருக்கும் நன்றி

cheena (சீனா) said...

//டபுள் ப்ரொமோஷன் கேள்வி பட்டிருக்கோம் இது என்ன இத்தனை க்ளாஸ் ப்ரொமோஷன்??//

சிவா - அது தான் ரகசியமே !! -அந்தக் காலத்துலே இப்பொ இருக்கற சிக்ஸ்த் ஸ்டாண்டர்ட் எல்லாமெ பர்ஸ்ட் பார்ம்னு தான் சொன்னாங்க. அதன்படி தேர்ட் பார்ம் படிச்சிட்டு போர்த் பார்ம் போகும் போது அதே நைந்த் ஸ்டாண்டர்ட்னு மாத்திட்டாங்க. அவ்ளோ தான்

பல ஆசிரியர் பெயர்கள் மறந்து விட்டன.

ஜூனியர் சீனியர் எல்லாம் ஒரே மாதிரி தான் - பசங்கன்னாலே ஒண்ணு தான்

cheena (சீனா) said...

சதங்கா, கவிதை தனியே வாசித்து ரசித்து மறுமொழி அங்கு இடுகிறேன். ஆசிரியர்களை ஏனோ என்னால் மறக்க முடியவில்லை.

//கம்பன் கைகட்டி நின்று
கதை மட்டும் கேட்பான் ! //

இசுலாமியர்களில் தமிழ் அறிஞர்கள் அதிகம் இருக்கிறார்கள்.

என்னுடைய மற்ற அசைபோட்டதுகளை சென்று பாருங்களேன்.

http://cheenakay.blogspot.com

cheena (சீனா) said...

ஜீவி,

என்னுடைய மற்ற அசை போட்ட பதிவுகளையும் பாருங்களேன்.

http://cheenakay.blogspot.com

ஜீவி said...

நண்பரே,

நீங்கள் குறிப்பிட்டிருந்தவாறு, மதுரை விஷயங்கள் அத்தனையையும் படித்து விட்டேன். அதில் நான் உணர்ந்தவை:

1. எழுதுகையில் ஒரு எழுத்துத் தப்பு கூடக் கிடையாது. இந்த மெய் எழுத்து--புள்ளிவைக்க
றது,

வைக்காமல் இருக்கிறது--இதைச் சொல்கிறேன்.

கணினியில் தட்டும்பொழுது இந்தப் பிழை ஏறபடாமல் தட்டுவது பெரிய விஷயம்.

2. மனந்திறந்து எழுதியிருக்கிறீர்கள், ஒளிவு மறைவில்லாமல்.

3. ஒரு குறை. உங்களை விட்டு, வெளியுலகில்

அந்தக் காலத்தில் என்ன நடந்தது--அவை உங்களை எப்படி பாதித்தது என்பதைச் சொல்லீயிருந்தீர்களென்றால், பார்வை முழுமை பட்டிருக்கும். தவறாக நினைக்காதீர்கள். இன்றைய தலைமுறைக்கு "அப்படியா,நடந்தது? ஆச்சரியமாயிருக்கே?" என்று பிரமிக்கும் புது விஷயங்கள் கிடைத்திருக்கும். ஒன்றுமில்லை; இந்த அரசியல் ஊறுகாயைத்தான் சொல்கிறேன்.

ஒரு விஷயம். உங்களதைப் படித்து விட்டு என்னாலும் சும்மா இருக்கமுடியவில்லை.

நானும், மதுரையைப் பற்றி எழுதப் போகிறேன்.

அனால், என்னுடைய மதுரை, 1950-54 வருஷத்தியது. அந்த உணர்வை ஏற்படுத்தியது நீங்கள் தான் என்பதால்,
பதிந்தவுடன் உங்களுக்குத் தெரியப்படுத்துகிறேன்.

நன்றி, சீனா சார்!

குமரன் (Kumaran) said...

ஆகா. ஜீவி ஐயா. அருமையாகச் சொன்னீர்கள். கீதா அம்மா கிண்டியதில் வலித்த சீனா ஐயா மனதுக்கு நன்கு இதமளிக்கும் வார்த்தைகள்.

cheena (சீனா) said...

குமரன், கீதா இப்போ என்னோட ப்ரண்ட். நான் பள்ளி நாட்களிலேயே சின்னச் சின்ன சண்டைகள் எல்லாம் மனசிலே வைச்சிக்கறது இல்லெ - இப்போ என்ன. நாங்க பழம் விட்டுட்டோமே - Nothing to worry

cheena (சீனா) said...

ஜீவி, வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. தங்களின் பதிவினை ஆவலுடன் எதிர் பார்க்கிறேன். 1950-54 - என்னுடைய முதல் ஐந்து வருடங்கள். விபரமறியா வருடங்கள்.

என்னுடைய பதிவினை அலசி ஆராய்ந்து தக்கதொரு அறிவுரையுடன் விமர்சித்தமைக்கு மிக்க நன்றி.

ஆலோசனையைக் கருத்தில் கொள்கிறேன்.

ஸ்ரீராம். said...

ஐயா! இதை இன்றுதான் வாசிக்கும் பேறு பெற்றேன். நானும் கூட தஞ்சையிலிருந்து மதுரை தான்!கோ. புதூரில்தான் குடியேற்றம். பின்னர் ரேஸ் கோர்ஸ் காலனி, அப்புறம் பேங்க் காலனி, அப்புறம் டவுன் ஹால் ரோடு, கோவில் தெரு, தற்சமயம் அப்பா அங்கு ஆலங்குளத்தில்! நான் சென்னையில்! நானும் அமெரிக்கன் காலேஜ் மேல்நிலைப் பள்ளிதான்!! கணக்குக்கு DR ! தஞ்சை தூய மேல்நிலைப் பள்ளியிலிருந்து அங்கு! படித்ததில் பழைய நினைவகளில் சுகம்!

Geetha Sambasivam said...

வாங்க ஸ்ரீராம், நம்ம ஊர்ப் பதிவுக்கு முதல் வருகை தந்தமைக்கு நன்றி. கருத்துக்கும் நன்றி.

cheena (சீனா) said...

அன்பின் ஸ்ரீராம் - முதல் வருகையா ? - வாழ்க வளமுடன் - மலரும் நினைவுகளைத் தூண்டி விட்டேனா ? அசை போட்டு ஆனந்தியுங்கள் - நட்புடன் சீனா