Monday, December 31, 2007

ஆறுபடை வீட்டில் திருப்பரங்குன்றம் முதல் படையானது ஏன்?

சென்ற வாரம் மாலையில் திருப்பரங்குன்றத்திற்குப் போக நேரிட்டது. நல்ல கூட்டம், சிறப்புக் கட்டணத் தரிசனத்துக்கே இருந்தது. சிறப்புத் தரிசனத்துக்குத் தான் சென்றோம். அங்கே தரிசனம் செய்யப்போகும் முன்னர் முதலில் அங்குள்ள மீனாட்சி சுந்தரேஸ்வரரைத் தரிசித்த பின்னரே முருகன் ஆலயத்திற்குச் செல்வது மரபு. ஆனால் நேரமின்மையால்,
முருகன் ஆலயத்திற்கே முதலில் சென்றோம். சிறப்புத் தரிசனச் சீட்டு வாங்கிச் சென்றோம். செல்லும் வழியிலேயே ஒரு அம்மன் சன்னதி, பிற்காலத்தில் ஏற்படுத்தப் பட்டது உள்ளது, எனினும் கூட்ட மிகுதியால் தரிசனம் செய்ய முடியவில்லை. பின்பு ஐந்து தெய்வங்களும் சேர்ந்து அருள் பாலிக்கும் இடம் வந்து, சிவலிங்கத் திருமேனி தரிசனம் முடிந்து கற்பக
விநாயகர் தரிசனம் செய்தோம். விநாயகருக்கும், சிவனுக்கும் சேர்த்து ஒரு அர்ச்சகர் இருந்தார். இரு சன்னதிகளிலும் தனித் தனியே தீப ஆராதனை செய்து வழிபடச் செய்தார். ,மிகச் சிறிய வயதினர் தான் என்றாலும் அவரிடம் என் சந்தேகத்தைக் கேட்டேன். ஏன் ஐந்து பேரும் ஒன்றாக வந்திருக்கிறார்கள் என.

முருகனுக்குத் திருமணம் என்றால் அம்மை, அப்பன் இல்லாமலா? ஆகவே ஐயன், தன் மூத்த மகன் விநாயகனுடனும், விஷ்ணுவுடனும், மஹிஷாசுர வதம் முடிந்த நிலையில் இருந்த அன்னையை அவசரம், அவசரமாய் இழுத்துக் கொண்டும் வந்திருக்கிறான்.
விஷ்ணு மாமன் அல்லவா? மேலும் முருகப் பெருமான் சன்னதியில், திருமணம் நடத்தி வைக்கும் பிரம்மா, நாரதர், சூரிய, சந்திரர், இந்திரன் என அனைவரையும் தனித்தனியாகச் சொல்லிக் காட்டி தீப ஆராதனை செய்தார். முருகனுக்கும், விஷ்ணுவுக்கும் ஒரே குருக்கள் , அம்பிகைக்குத் தனியாக ஒரு குருக்கள் என இருந்தனர். எல்லா சன்னதியிலும் அவரவர் விருப்பத்துக்கு ஏற்ப,அத்தனைக் கூட்டத்திலும் அர்ச்சனைகள் செய்து தரப்பட்டது.

"அர்ச்சனைத் தட்டை கொடுத்தால் "எந்த கேரக்டருக்கு அர்ச்சனை?" என்று கேட்பதே இல்லை. எந்தெப் பெயருக்கு என்று கேட்டுவிட்டுநேரே முருகனுக்குப் போய்விடும்.
"முருகனைப் பார்க்க வரவில்லை, துர்க்கவிற்காக வந்தேன்" , என்றால் அர்ச்சகரால் நீங்கள் டேப்பராகப் பார்க்கப்பட வாய்ப்பு உண்டு. மேலும் இங்கே முருகன் என்ற ஒரு கேரக்டருக்காக கொண்டாடப்படும் விழாக்கள் போல சம அந்தஸ்தில் உள்ள மற்ற கேரக்டர்களுக்கு விழாக்கள் கொண்டாடப்படுவது இல்லை."

மேலே உள்ளது பலூன் மாமாவின் திருப்பரங்குன்றம் பற்றிய வர்ணனை! ஆனால் அர்ச்சகர்கள் கேட்டுக் கொண்டே அர்ச்சனைகள் செய்தனர். முருகன் என்ற ஒரு காரக்டருக்கு மட்டுமே விழா எடுப்பதாயும் சொல்லி இருக்கிறார் பலூன் மாமா. உண்மைதான், கல்யாணத்தில் கல்யாணப் பையன் தான் ஹீரோ, மற்றவர் எல்லாம் ஜீரோதானே?
எந்த அர்ச்சகரும் எந்த பக்தரையும் "டேப்பர்" எனப் பார்க்கவில்லை, இன்னும் சொல்லப் போனால் எங்கள் பயணத்திலேயே இந்தச் சன்னதியிலும், பழனியிலும் மட்டுமே தரிசனம் நன்கு செய்ய முடிந்தது. இது தான் உண்மை! மற்றக் கேள்விகளுக்கான பதில் தொடர்கிறது.

"பலூன் மாமாவின்கேள்வி ஒன்று: ஐந்து காரக்டருக்கான ஒரு பொதுக்கோவில் எப்படி ஒருவருக்கான கோவிலாக உருமாறியது?"

முதலில் இது ஐந்து பேருக்கான கோவிலே இல்லை. எனக்குத் தெரிந்தவரை, இதைத் தென்பரங்குன்றம் எனச் சொல்லுவார்கள். பரம் என்பது எல்லையற்ற அந்தப் பரம்பொருளான சிவனைக் குறிக்கும். இங்கே மலையே லிங்க வடிவில் உள்ளது. மேலும் தென்னாட்டில் உள்ளது. ஆகவே இதன் பெயர் தென்பரங்குன்றம் என ஆயிற்று. திரு என்பது அடைமொழி, சிறப்பாகச் சொல்லுவதற்குப் பயன்படுத்தப் பட்டு பின்னாட்களில் திருப்பரங்குன்றம் என்பது நிலைத்திருக்கலாம். சிவனடியார்கள், தென் கைலை மலை எனவும் இதைச் சிறப்பித்து இருப்பதாய்ச் சொல்கின்றனர். மலையின் உச்சியிலும் ஒரு சிவன் கோயில் உள்ளது. லிங்கவடிவில் காட்சி அளிக்கும் இம்மலையில் சிவசக்தியை நோக்கி ஆறுமுகப் பெருமான் தவம் இருந்ததாய்ச் சொல்லப் படுகிறது.

குருபக்தியின்றி ஞானம் பெற முடியாது. அன்னை மடியில் அமர்ந்து சோமாஸ்கந்தனாய் முருகன் அருள் பாலித்திருந்த வேளையில், பிரணவ மந்திர உபதேசத்தை அன்னைக்கு, இறைவன் உபதேசிப்பதைக் கேட்க நேர்ந்தது. நடந்தது தற்செயலான ஒன்று என்றாலும், ஆறுமுகனே பிரணவ மந்திரத்தை அறியாதவன் அல்ல என்றாலும், சிவனும், தானும் ஒன்றே என்பதை உணர்ந்திருந்தாலும், எதுவும் முறையின்றி நடக்கக் கூடாது எனத் தன் குற்றத்திற்குப் பரிகாரம் தேடி இங்கே வந்து தவம் செய்த முருகனுக்கு, அம்மனும் அப்பனும் காட்சி கொடுக்கின்றனர். ஐயனைப் "பரங்கிநாதர்" எனவும், அம்மையை "ஆவுடை நாயகி" எனவும் அழைக்கின்றனர். அந்த ஆலயம் தான் தற்போது மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயம் என அழைக்கப் படுகிறது, என்றும், முதலில் அங்கே போய்த் தரிசனம் முடித்து விட்டே பின்னர் முருகன் ஆலயம் செல்லவேண்டும் என்றும் சொல்கின்றனர்.

மற்றக் கேள்விகளுக்குப் பதில் தொடரும். தகவல்கள் கோயிலில் மட்டுமின்றி கூகிள் தேடலிலும் தேடி உறுதி செய்து கொண்டேன்.

Friday, December 28, 2007

பலூன் மாமாவின் கேள்விகளுக்குப் பதில், சில நாட்களில்!

"இங்கே...

(A) பவளக்கனிவாய் பெருமாள்
(B) முருகன்
(C) துர்க்கை
(D) கற்பகவிநாயகர்
(E) அர்த்தகிரீஸ்வரர் (சிவன்)
என்று 5 தெய்வ உருவங்கள் உண்டு.

அர்ச்சனைத் தட்டை கொடுத்தால் "எந்த கேரக்டருக்கு அர்ச்சனை?" என்று கேட்பதே இல்லை. எந்தெப் பெயருக்கு என்று கேட்டுவிட்டு நேரே முருகனுக்குப் போய்விடும். "முருகனைப் பார்க்க வரவில்லை, துர்க்கவிற்காக வந்தேன்" , என்றால் அர்ச்சகரால் நீங்கள் டேப்பராகப் பார்க்கப்பட வாய்ப்பு உண்டு. மேலும் இங்கே முருகன் என்ற ஒரு கேரக்டருக்காக கொண்டாடப்படும் விழாக்கள் போல சம அந்தஸ்தில் உள்ள மற்ற கேரக்டர்களுக்கு விழாக்கள் கொண்டாடப்படுவது இல்லை.


கேள்விகள்:


(1). 5 கேரக்டர்களுக்கான ஒரு பொதுக் கோவில் ,எப்படி ஒருவருக்கான கோவிலாக உருமாறியது?

(2.) தல புராணங்கள் எந்தக் காலத்தில் திருத்தப்பட்டது?

(3.) இது முருகனுக்கான ஆறுபடை வீடுகளில் முதல் வீடாக ஏன் கட்டமைக்கப்பட்டது ?"


மேலே குறிப்பிட்டவை பலூன்மாமாவின் திருப்பரங்குன்றம் பற்றிய சந்தேகங்கள். இந்த வாரம் திடீரென நேரிட்ட மதுரைப் பயணத்தில் திருப்பரங்குன்றம் செல்லும் வாய்ப்பும் கிடைத்தது. அப்போது என்னுள்ளும் எழுந்த இந்த சந்தேகங்களுக்குப் பதில் கிடைத்தது. சீக்கிரம் விரிவாய்ப் பதில் எழுதுகிறேன். ஒரு வாரம் ஊரில் இல்லாததால் முதலில் வீடு ஒழுங்கு செய்தலுக்கு முதல் கவனிப்புத் தேவை. ஆகவே சற்று அவகாசம் கிடைத்ததும் பதிவிடுகிறேன். நன்றி.

Saturday, December 15, 2007

மதுரை அழைக்கிறது...

மதுரை மாநகரம் பகுதியில் இருக்கும் பதிவுகள் அனைத்தையும் இன்றுதான் முழுமையாகப் படித்து முடித்தேன். நம் ஊர் என்றாலும் இதுவரை அறிந்திராத செய்திகள்தான் எத்தனை!
மலரும் நினனவுகள், தலபுராணம் என்று பகுதிகள் அனனத்தும் மீண்டும் நம் ஊர்ப்பக்கம் போய் வரச் செய்தன..இதைப் படித்ததும் கொஞ்சம் திருப்தி, கொஞ்சம் புரிதல், கொஞ்சம் சிந்தனை, கொஞ்சம் ஆதங்கம் எல்லாமே எழுந்தது மனதில்...இத்தனை பேர் நம் ஊர்க்காரர்கள் இருக்கிறார்களேயென்ற திருப்தி, நம் கல்லூரியில் படித்தவர்கள் இருக்கிறார்கள் என்ற மகிழ்ச்சி, ஊரைப் பற்றிக் கொஞ்சம் புரிதல், சில புதிய கேள்விகள் எழுப்பிய சிந்தனை, இன்னும் நிறையப் பதிவுகள் பலரிடமிருந்து வர வேண்டுமே என்ற ஆதங்கம்..எல்லாம் எழுந்தது.

சமீபத்தில் படித்த செய்தி..மதுரையிலிருந்து கன்னியாகுமரி, கொடைக்கானல், இராமேஸ்வரம் முதலிய இடங்களுக்கு ஹெலிகாப்டர் வசதி அறிமுகப்படுத்தப்படவிருக்கிறது என்று சுற்றுலாத்துறை அறிவித்துள்ளது.

இன்னும் 2 தினங்களில் மதுரை மண்ணிற்கு விடுமுறைக்காக 2 வாரம் வரப் போகிறேன்..இந்த முறை இன்னும் நமக்குத் தெரிந்தவர்கள் அதிகம் பேர் இருக்கிறார்கள் என்ற புது உணர்வுடன்..

இந்தக் குழுவில் இணையும் முன்னே என்னுடைய பதிவில் இடப்பட்ட 2 பகுதிகளை இங்கு உங்கள் பார்வைக்கு வைக்கிறேன்..

Tuesday, November 13, 2007
மாறி வரும் மதுரை மாநகர் - 1

சமிபத்தில் ஒரு மின்னஞ்சல் கிடைக்கப்பெற்றேன்..மகேந்திரவர்மன் என்ற நபர் அனுப்பியது அது..எப்படியோ யாஹூ குழுமத்தில் எனக்கும் வந்து சேர்ந்தது..அதில் படித்த செய்திகள் மற்றும் சமீபத்தில் ஊருக்கு நான் சென்ற போது கண்டவை கேட்டவையே இந்தப் பதிவுக்குக் காரணம்..

மதுரை ஒன்றுதான் மாறி வரும் உலகில் மாறாத நகரம் என்று என் கணவர் உட்பட அநேகர் கூறியதுண்டு..(என் கணவருக்கும் என்னைப் போல் மதுரைதான் சொந்த ஊர் என்பது வேறு விஷயம்)..அவர்களுக்கெல்லாம் பதில் கூற வேண்டிய நேரம் இப்போதுதான் கைகூடியுள்ளது..மீனாட்சியம்மன் கோவிலைச் சுற்றி அடுக்கடுக்காகத் தாமரை இதழ்களைப் போல அடுக்கி வைக்கப்பட்ட தெருக்கள்...நிறைய மாறாதிருந்த அந்தப் பகுதியில் கடந்த வருடம் முதல் தடாலடி மாற்றங்கள்...பிரம்மாண்ட கட்டடங்களை முதலில் அறிமுகம் செய்த பெருமை பல நகைக்கடைகளையே சாரும்...எத்தனையோ காரணங்கள் கூறியதுண்டு...கோவில் கோபுரத்தை விட உயர்வான கட்டடங்களைக் கட்டக்கூடாது என்பதுதான் காரணம் என்று சிலரும்...ஆழமாக அஸ்திவாரம் தோண்டுவதால் பாதாளக் கழிவு நீர்க் குழாய்கள் பாதிக்கப்படும் என்று சிலரும் பலவாறாகக் காரணங்கள் கூறினர்...அடுக்கு மாடிக் கட்டடங்கள் இல்லாவிட்டாலும் பிரம்மாண்டமான கட்டடங்கள் பல்கிப் பெருகி வருகின்றன என்பது மதுரைவாசிகளை மகிழவைக்கும் உண்மையாகும்..

இன்னும் ஏற்படவிருக்கும் மாற்றங்களும், துறைகளும்:

1.ரியல் எஸ்டேட் துறையில் அபரிமித வளர்ச்சி...போட்டா போட்டி..தகவல் தொழில் நுட்பப் பூங்காக்கள் வரப்போவதற்கான அறிவிப்பின் எதிரொலி..நாளுக்கு நாள் நிலத்தின் மதிப்பு உயருவதால் உடனே விற்பதற்கு யோசிக்கும் உரிமையாளர்கள்..

2. விரிவாக்கப்படும் விமான நிலையம் கூடிய சீக்கிரம் பன்னாட்டு விமான நிலையமாகப் போகிறது..

3. அங்கங்கே முளைக்கும் townships..பல தரப்பட்ட நவீன வசதிகளுடன்...

4.பல பகுதிகளில் அமையவிருக்கும் தொழிற்பேட்டைகள்

5. சென்னை மற்றும் கேரளா சார்ந்த பிரபல நகைக்கடைகளின் கிளைகள்

6. மதுரையின் பழம்பெரும் திரையரங்குகள் பல பிரபல் துணிக்கடைகளின் கிளைகளாக மாற உள்ளன.

7. மதுரையில் கால்பதிக்கவிருக்கும் அநேக தகவல் தொழில் நுட்ப மையங்கள் மற்றும் பூங்காக்கள்

8. உருவாகப் போகும் 3 மற்றும் 5 நட்சத்திர விடுதிகள்

9. பெருகி வரும் இலகுரக மற்றும் கனரக பிரபல மோட்டார் வாகன விற்பனை நிலையங்கள்

10.வரவிருக்கும் திரையரங்குகளுடன் கூடிய Multiplex கட்டடங்கள்

11.சுற்றிலும் கட்டுமானத்தில் இருக்கும் நான்கு வழிப் பாதையில் தேசிய நெடுஞ்சாலைகள்..

இன்னும் இன்னும் அநேக துறைகளில் மாறி வருகிறது மதுரை மாநகர்..

மதுரை தமிழ்நாட்டின் இரண்டாவது தலைநகரம் என்ற தகுதிக்குத் தயாராகிவிட்டது என்று கட்டியங்கூறும் சில தகவல்கள் அடுத்த பகுதியில்...

Posted by பாச மலர் at 4:14 AM 4 comments

Labels: மதுரை

Saturday, November 17, 2007
மாறி வரும் மதுரை மாநகர் - 2


மதுரையின் சிறப்புகள் பல அனைவரும் அறிந்ததே...தென் தமிழ்நாட்டின் தலைநகரம், தூங்கா நகரம், கிழக்குப் பகுதியின் ஏதென்ஸ், கோவில் நகரம் என்ற பல சிறப்புப் பெயர்களைப் பெற்ற நகரம்.


இரண்டாவது தலைநகரம் என்பது தேவையில்லை என்று தற்சமயம் வாதிட்டாலும், நிர்வாக சவுகரியங்களுக்காகவும், செயலாக்கத் திட்டங்களை விரிவு மற்றும் விரைவு படுத்துவதற்காகவும் என்று பல காரணங்களுக்காக இன்னொரு தலைமையகம் தேவை என்ற நிலை குறுகிய காலகட்டத்துக்குள் ஏற்படும் சாத்தியக்கூறுகள் ஏராளமாய் உள்ளன. அந்த நிலை ஏற்படும்போது மதுரை நகரின் பெயர் முன்னிலை வகிக்கும்.


இராமர் சேது முனையல், உள்மாநில, வெளிமாநில அளவில் அநேகப் பெரு நகரங்களை இலகுவாகச் சென்று சேரும் வண்ணம் புவியியல் அமைப்பு மற்றும் போதுமான போக்குவரத்து வசதிகள்,(இதனால்தானே அரசியல் முதல் சினிமா வரை அனைத்து மாநாடுகளுக்கும் மதுரை தமுக்கம் மைதானம் களமாகிறது..) கூப்பிடு தூரத்தில் கவின்மிகு சுற்றுலா மையங்கள்,வழிபாட்டுத் தலங்கள், தரமான கல்வி நிலையங்கள், மருத்துவமனைகள், உயர்நீதிமன்றக் கிளை, விரைவில் அமையவிருக்கும் மண்டலக் கடவுச் சீட்டு அலுவலகம்..சமுதாயத்தின் அடித்தட்டு மக்கள் முதல் மேல்தட்டு மக்கள் வரை அனைவரின் தேவைகளும் பூர்த்தியாக்கும் விலைவாசி நிலவரம், இன்னும் இன்னும்...


முத்தாய்ப்பாக ஒரு செய்தி...JNNURM - Jawaharlal Nehru National Urban Renewal Mission மதுரைக்கு அளிக்கவிருக்கும் பல ஆயிரம் கோடிகள் ...


மதுரைவாசி என்பதால் மட்டுமல்ல நியாயமான பல காரணங்களுக்காகவும் மதுரை மாநகர் இரண்டாவது தலைநகரமாகும் நன்னாளை ஆவலுடன்
எதிர்பார்க்கிறேன்..

- மலர்.

Posted by பாச மலர் at 4:17 AM 9 comments

Labels: மதுரை

Tuesday, December 11, 2007

திருப்பரங்குன்றம் - முருகனும் அவனுக்கு பக்கத்தில் சிலரும் அனைவருக்கும் தெய்வம் என்று பெயர் அல்லது தெற்கே சமணத்தின் நினைவுச்சின்னம்

நான் சென்ற பதிவில் சொன்னது போல் 'திருப்பரங்குன்றம்' என்ற இடத்தில் உள்ள குன்று, பல வரலாற்றுச் சம்பவக்களுக்கு மவுனச் சாட்சியாய் இருக்கும் ஒரு இடம். ஒரு சிறந்த ஆய்வுக் குழுவால் மட்டுமே அதன் இரகசியங்களை வெளிக்கொணரமுடியும்.

வரலாற்றில் இதுதான் உண்மை என்று யாராலும் வரையறுக்க முடியாது. எந்த தகவல் உண்மைக்கு மிக அருகில் இருக்கலாம் என்று வேண்டுமானால் பேசலாமே தவிர, இதுதான் உண்மை என்று சொல்லவே முடியாது. நாளை தமிழ்நாட்டின் ஏதோ ஒரு மூலையில் கண்டறியப்படும் ஒரு கல்வெட்டு , இதுவரை நாம் நம்பிவந்த எல்லாத் தகவல்களையும் புரட்டிபோடும் ஒரு புதிய ஆதாரத்தை வைத்து இருக்கலாம், யார் கண்டார்?

வரலாறும் , அறிவியலும் இன்றைக்கு உள்ள நிலையில் சில உண்மைகளைச் சொல்லும். நாளையே வேறு ஒரு ஆராய்ச்சி, முற்றிலும் புதிய ஒரு கருத்தைச் சொன்னால , அதையும் ஏற்றுக்கொண்டுவிடும். "இதுதான் இறுதி" என்று சொல்லாமல், தகவல்களைப் பதிவதே உண்மையான அறிவியல்.

வரலாறும் அப்படியே , இன்று அறியப்படாமல் இருக்கும் சில உண்மைகள்,நாளை கண்டறியப்படலாம். இன்று காணக்கிடைக்காத வரலாறு சம்பந்தமான தகவல்கள், வருங்காலத்தில் சாத்தியமாகலாம்.அப்போது புதிய தவல்கள் கிடைக்கும்.புராணங்களும் புனிதப் புத்தகங்களும் அப்படி அல்ல. அவை கேள்விக்கு அப்பாற்பட்டவைகள். "நம்பிக்கை", "நம்பு" என்ற கட்டளைக்குள் வருபவை. அவற்றின் உண்மைத்தன்மை பற்றி கேள்வி கேட்ப்பவர்களுக்கு அங்கே இடம் இல்லை. முகம்மதின் இருப்பை கேள்வி கேட்பவன் ஒரு முஸ்லிமாக இருக்கமுடியாது. மதம் சார்ந்த புராணங்கள், நம்பிக்கை என்ற ஒரு சாவி இருந்தால் மட்டுமே நம்மை ஏற்றுக் கொள்ளும். கேள்விகள் கேட்கும் பட்சத்தில் கதவுகள் அடைக்கப்படும்.

கேள்வியைக் கேட்டவன் அவன் நினைக்கும் பதில்களைப் பகிரவேண்டும் அல்லது எனக்கு ஒன்றும் தெரியாது என்று அறிவிக்க வேண்டும். நான் எழுப்பிய கேள்விகளுக்கான விடைகளை எனது பார்வையில் சொல்கிறேன். இங்கே சொல்லப்போகும் பதில்கள் யாவும் எனது சாதாரணப் பார்வையில் தோன்றிய தனிப்பட்ட எனது கருத்துகளே தவிர எந்த ஆராய்ச்சியின் முடிவும் அல்ல. அது போல் ஒட்டுமொதத மதுரைப்பதிவர்களின் சார்பானதும் அல்ல.


(1) 5 கேரக்டர்களுக்கான ஒரு பொதுக் கோவில் ,எப்படி ஒருவருக்கான கோவிலாக உருமாறியது?

இதில் ஆச்சர்யம் ஒன்றும் இல்லை. இதே கோவில் கல்கத்தாவில் இருந்திருந்தால் "திருப்பரங்குன்றக் காளி" கோவிலாக அடையாளப்படுத்தப்பட்டு , துர்க்கை முக்கியமான தெய்வமாகக் கொண்டாடப்பட்டு , மற்றவர்கள் இரண்டாம் கட்ட தெய்வங்களாக கட்டமைக்கப்பட்டு இருப்பார்கள்.

இதே கோவில், காசி போன்ற இடங்களில் இருந்திருந்தால் அர்த்த கிரீஸ்வரர் முன்னிலைப்படுத்தப்பட்டு இருப்பார்.

ஆந்திராவில் இருந்திருந்தால் பவளக்கனிவாய் ,அருள் கொடுக்க முதல் வரிசைக்கு வந்து இருப்பார்.

பல தெய்வ உருவங்கள் சமமாக உள்ள கோவில்கள், அது இருக்கும் இடம் பொருத்து நேயர் விருப்பம் போல் எதோ ஒரு தெய்வம் மட்டும் முன்னிலைப்படுத்தப்படும். எது, எங்கு, விலைபோகிறதோ அதுவே முன்னிலைப்படுத்தப்படும். இது சந்தைப்படுத்தலின் உத்தியே தவிர வேறு எந்தச் சிறப்பும் இல்லை.

பல்வேறு காரணங்களால் முருகன் தமிழ்க்கடவுளாக அறியப்படும் தமிழகத்தில், அவனே முதற் பொருளாய் இருப்பதில் வியப்பில்லை.

முருகன் விலை போவான் என்றானவுடன், அவன் சார்ந்த கதைகளும், காவியங்களும் அதிகமாக இடம் பிடித்துவிட்டது. மீனாட்சி- சொக்க்கநாதர் ஆலயத்திலும் இந்த சந்தைப்படுத்தல் உத்தியைக் காணலாம். இந்தியா அளவில் சிவபெருமான் என்னதான் பெரிய கடவுளாக இருந்தாலும், மதுரை மண் வாசம் கதைகளுக்குச் சொந்தக்காரியான மீனாட்சியே முக்கிய இடம் வகிக்கிறாள்.
(2.) தல புராணங்கள் எந்தக் காலத்தில் திருத்தப்பட்டது?

என்னிடம் இதற்கான துல்லியமான விடையில்லை. ஆனால், எனது புரிதல்களின் அடிப்படையில் இப்படி இருக்கலாம் என்று எண்ணுகிறேன்.

மதுரையில் சமணம் அழிந்து சைவ,வைணவ சித்தாந்தங்கள் தலையெடுக்கும் போது முருகனின் கதைகள் கட்டமைக்கப்பட்டு இருக்கலாம். சமணத்தை அழிக்கும் நோக்கில் இடைவிடாது கதைகள் புனையப்பட்டு இருக்கலாம்.13ம் நூற்றாண்டுகளின் ஆரம்ப காலத்தில் அல்லது 12 ஆம் நூற்றாண்டுகளின் கடைசிக்காலங்களில் புராணங்கள் திருத்தப்பட்டு இருக்கலாம்.

(3.) இது முருகனுக்கான ஆறுபடை வீடுகளில் முதல் வீடாக ஏன் கட்டமைக்கப்பட்டது ?

தமிழக வரலாற்றில் மதுரை என்பது மிகப்பழமையான நகரம். இக்கால அரசியலில், கட்சி ஆரம்பிப்பவர்கூட முதல் மாநாட்டை மதுரையில் தொடங்கவே ஆசைப்படுகிறார்கள். மேலும் தமிழ்ச் சங்கம் என்றால் அது மதுரை என்று ஆகிவிட்டது.

முருகன் தமிழக் கடவுளாக அறியப்படும்போது ,அவனின் முதல்வீடு மதுரையில் இருந்தாக வேண்டிய கட்டாயம். அதன் பொருட்டே தனியான அறை ஏதும் இல்லாமல், ஒரே குன்றில் மற்ற தெய்வங்களுடன் இருந்தாலும், இந்த இடம் முருகனின் ஆறுபடை வீடுகளில் முதல் வீடாக கட்டமைக்கப்பட்டு உள்ளது.

ஆன்மீக அரசியலில் நடந்துள்ள மிக நுண்ணியமான கட்டமைப்பு என்றே நினைக்கிறேன்.

அல்லது இந்த இடம் மற்ற முருகன் தலங்களுடன் ஒப்பிடும்போது பழமையான ஒன்றாக (கால அளவில்) இருக்கும் வேளையில் , முதல் வீடாக அடையாளம் காட்டப்பட்டு இருக்கலாம்.
விரிவான முந்தைய கருத்துப் பரிமாற்றத்தை வாசிக்க...
திருப்பரங்குன்றம்- இடமிருந்து வலமாக பவளக்கனிவாய் பெருமாளும் மற்றும் சில தெய்வங்களும்
http://pathivu.madurainagar.com/2007/12/blog-post_06.html


Picture Courtesy:
http://www.yogamalika.org/

Sunday, December 9, 2007

தலபுராணம் - 5

ரீகல் தியேட்டர் உறவு பல ஆண்டுகள் நீடித்தது. பின்னால் பரமேஸ்வரி என்று இன்னொரு தியேட்டர் ஆங்கிலப் படங்களுக்கெனவே வந்து, அதுவும் எங்கள் வீட்டுப் பக்கமே இருந்தது வசதியாகப்போனது. அதன் பின் வேறு சில தியேட்டர்களும் ஆங்கிலப் படத்துக்கென்றே வந்தன. ஆனாலும், அந்த ரீகல் தியேட்டரும், தனிப்பட்ட அதன் culture-ம், அதில் படம் பார்க்கும் ரசனை மிகுந்த கூட்டமும் - எல்லாமே காலப் போக்கில் ஓர் இனிய கனவாகிப் போயின. இப்போது வெளிப்பூச்செல்லாம் அழகாகச் செய்யப்பட்டு, ‘பளிச்’சென்று இருந்தாலும், ஐந்தரை மணிவரை வாசகசாலையாக இருந்து, அதன்பின் ஏதோ மாயாஜால வித்தை போல் சடாரென தியேட்டராக மாறும் அந்த இனிய நாட்கள் இனி வரவா போகின்றன?



‘ரீகல் நாட்க’ளின் தொடர்பு இருந்தபோது, அதிலிருந்து 50 காலடி தொலைவுகூட இல்லாத ‘காலேஜ் ஹவுஸ்’ என்ற லாட்ஜிடமும் ஒரு தொடர்பு ஏற்பட்டது. இது ரீகல் தியேட்டரிலிருந்து ஆரம்பமாகும் டவுண் ஹால் ரோடு என்ற மதுரையின் மிக முக்கிய ரோட்டில் உள்ள பழம்பெருமை பேசும் மதுரையின் இன்னொரு ‘தலம்’!


(காலேஜ் ஹவுஸ்)




படம் பார்க்காத நாட்களில் எங்கள் நண்பர்கள் கூடும் ‘joint’ இந்த லாட்ஜின் முன்னால்தான். படத்தில் தெரியும் ஜுபிடர் பேக்கரி முன்னால் நம்ம குதிரை -அதாங்க, நம் ‘ஜாவா’ - ஒவ்வொரு மாலையும் நிற்கும். அதற்குப் பக்கத்தில் இருபுறமும் நாலைந்து சைக்கிள்கள். நண்பர்கள் குழாம் கூடிவிடும். ஆறு மணி அளவில் வந்தால் எட்டு ஒன்பது மணி வரை இந்த இடமும், இதைச் சார்ந்த இடமும்தான் நம் அரட்டைக் கச்சேரி மேடையேறும்; எல்லா விஷயங்களையும் அலசி, ஆராய்ந்து, துவச்சி, காயப்போட்டுட்டு, அதற்கு அடுத்த நாள் வந்து அதை எடுத்து மீண்டும் அலச ஆரம்பிக்கிறது. ஆர அமர்ந்து அரட்டை அடித்த இடம் இது என்று இப்போது யாரிடமேனும் சொன்னால் நம்பாமல் ஆச்சரியப்படுகிறார்கள். ஏனெனில் இப்போது இங்கு நிற்கக்கூட முடியாது; அவ்வளவு ஜன நெரிசல். கீழே உள்ள படத்தைப் பார்த்தாலே இப்போது எப்படி இருக்கிறதென்பது தெரியும்.

ஆனால் இந்த ‘காலேஜ் ஹவுஸ்’ அதுக்கு முந்தியே நம்ம வாழ்வில் ஒரு இடம் பிடிச்சிரிச்சி. சின்னப் பையனா இருந்த போதே, இந்த காலேஜ் ஹவுஸுக்கு ஒரு தனி ‘மருவாதி’ உண்டு. அப்போவெல்லாம், நயா பைசா காலத்துக்கு முந்தி காபி, டீ எல்லாமே ஓரணாவிற்கு விற்கும்; நயா பைசா காலம் வந்ததும், காபி, டீ விலை சாதாரணமா 6 பைசா; ஸ்பெஷல் காபி’ன்னா 10 பைசா. அந்தக்காலத்திலேயே, அந்த மாதிரி 10 பைசாவுக்கு காபி, டீ விற்கும்போது காலேஜ் ஹவுஸில் காபி நாலரையணா, அதன்பின் 30 பைசா. அதாவது, வெளியே விற்கும் விலையைவிட 3 மடங்கு அதிகம். அப்போ, எங்க வீட்டுக்கு ஒரு உறவினர் வருவார். வந்ததும் முதல் வேலை, ஒண்ணு அப்பா சைக்கிள் இல்ல..வாடகை சைக்கிள் எடுத்துக்கிட்டு, என்னையும் பின்னால உட்கார வச்சுக்கிட்டு - நான் தான் அவருக்கு சந்து பொந்து வழியா வழி சொல்ற வழிகாட்டி - நேரே காலேஜ் ஹவுஸ் போய் காபி குடிக்கிறதுதான். எனக்கு அவர் காபி குடிக்கிறதுக்காகவே ஊர்ல இருந்து வர்ராரோன்னு தோணும். அப்படி ஒரு மகிமை அந்த காபிக்கு. அந்தக் காபியின் மகத்துவம் பற்றி நிறைய வதந்திகள் - யாரோ ஒரு சாமியார் கொடுத்த ஒரு மூலிகை ஒன்றை சேர்ப்பதலாயே அந்த ருசி; அப்படியெல்லாம் இல்லை. காபியில அபின் கலக்குறாங்க; அதனாலதான் அந்த டேஸ்ட். அதனாலேயே இந்த காபி குடிக்கிறவங்க அது இல்லாம இருக்க முடியாம (addiction என்ற வார்த்தையெல்லாம் அப்போ தெரியாது) ஆயிடுறாங்களாம். இப்படிப் பல வதந்திகள். எது எப்படியோ, நிறைய பேர் இந்தக் கடை காபிக்கு அடிமையாய் இருந்தது என்னவோ உண்மைதான்.

சின்ன வயசில ‘வேப்ப மர உச்சியில நின்னு பேயொண்ணு ஆடுது…’அப்டின்றது மாதிரி இது மாதிரி எத்தனை எத்தனை வதந்திகள். அதையே ஒரு பெரிய லிஸ்ட்டாகப் போடலாம். இந்த காலேஜ் ஹவுஸுக்குப் பக்கத்து சந்திலதான் ஆசியாவின் மிகப் பெரிய தியேட்டர் என்ற பெருமையோடு இருந்தது - தங்கம் தியேட்டர். ஒரு பெரிய கால்பந்து மைதானத்தையே உள்ளே வைத்து விடலாம்போல அவ்வளவு பெரிய தியேட்டர். சுற்றியும் பெரிய இடம். தியேட்டரின் வெளி வராந்தாவே அவ்ளோ அகலமா இருக்கும். இதுதான் நான் சிகரெட் குடிச்சி, போலிசிடம் பிடிபட்டு, ஆங்கிலத்தால தப்பிய ‘தலம்’! இந்த தியேட்டரில் கூட முதல் நாள் படம் பார்க்க டிக்கெட் வாங்கும் இடத்தில் கூட்டத்தில் சிக்கி உயிர் இழந்த சினிமா ரசிகர்கள் உண்டு என்றால் எங்கள் ஊரின் மகிமையை என்னென்று சொல்வது! இந்த தியேட்டர் கட்டும்போது - அப்போது நான் நான்காம் ஐந்தாம் வகுப்பு மாணவனாயிருந்திருப்பேன் என்று நினைக்கிறேன். பல கதைகள் காற்றில் வந்த நினைவு இருக்கிறது. நரபலி கொடுத்ததில் பானை நிறைய கிடைத்த தங்க காசுகள் வைத்துக் கட்டப்பட்ட தியேட்டர் என்றார்கள். இதன் முகப்பு மீனாட்சி அம்மன் கோயிலைவிட உயரமாகப் போய்விடும் என்பதால் அந்த முகப்பைக் கட்ட அனுமதி மறுக்கப்பட்டது என்று பின்னாளில் கேள்விப் பட்டோம். ஆனால் அந்த சமயத்தில் நரபலிக் கதையின் தொடர்ச்சியாக வேறு சில கதைகள் மிதந்தன.

இப்போது இந்த தியேட்டரின் படத்தைப் போட ஆசைப் பட்டு படம் எடுக்கப் போனால், மிகவும் பரிதாபமாக முள்ளும் செடியும் மரமுமாய் பாழடைந்து பரிதாபக் கோலத்தில் இருக்கிறது. படம் எடுக்கவும் அனுமதியில்லை. என்ன பிரச்சனையோ. ஒரு காலத்தில் சிவாஜி கணேசன் இதை வாங்கப் போறதாகவும் ஒரு வதந்தி. பல வதந்திகளில் முதலிலிருந்தே சிக்கியிருந்த அந்த பிரமாண்டமான தியேட்டரைத்தாண்டி வரும்போதும், பார்க்கும்போதும் அதன் அன்றைய நாளின் சிறப்பு கண்முன்னே வருகிறது. என்ன, இன்னும் சில ஆண்டுகளில் அங்கே ஒரு பெரிய ஹோட்டலை எதிர்பார்க்கலாம் என்று நினைக்கிறேன்.

இப்படி, ரீகல் தியேட்டர் போல் பிரபல்யமான இடங்களும், தங்கம் தியேட்டர் மாதிரியான பிரமாண்டமான இடங்களும் மிகக் குறுகிய காலத்திலேயே இருந்த இடம் தெரியாமலோ, அல்லது தங்களின் உன்னதங்களை இழந்து போவதென்றால் மனுஷ ஜென்மத்தைப் பற்றி சொல்ல என்ன இருக்கிறது? அதிலும் ஒன்று ‘வெள்ளையடிக்கப்பட்ட கல்லறைகள்’ என்று சொல்வதுபோல, வெளியே பார்க்க அழகு; உள்ளே சீழும், பேனும் என்பது போலவும், இன்னொன்று முற்றுமாய் எல்லாம் இழந்து பரிதாபமுமாய் நிற்பதைப் பார்க்கும்போது என்ன சொல்வதென்றே தெரியவில்லை.

QUE CERA CERA…

Friday, December 7, 2007

திருப்பரங்குன்றம்- இடமிருந்து வலமாக பவளக்கனிவாய் பெருமாளும் மற்றும் சில தெய்வங்களும்

தி ருப்பரங்குன்றம்! தன்னுள் வரலாற்றின் காயங்களையும், எண்ணற்ற மக்களின் வேண்டுதல்களையும் சுமந்து கொண்டு இருக்கும் ஒரு குன்று.இந்தக் குன்றைப் பற்றி பேசவேண்டும் என்றால் எந்தக் கோணத்தில் இருந்தும் பேசலாம். யாரும் தட்டையாக இதுதான் இதன் 'தல' புராணம் என்று ஒரு சில பக்கங்களில் சொல்லிவிட்டுப்போக முடியாது.சரித்திர/வரலாற்று ஆராய்ச்சியாளர்களுக்கு இது ஒரு புதையல் கிடங்கு என்பது எனது எண்ணம்.

பலருக்கும் இந்தக் குன்று முருகனின் ஆறுபடைவீடுகளில் முதல்வீடு என்ற வடிவத்தில்தான் அறிமுகமாயிருக்கும்.

குன்றைப்பற்றி கேள்விகள் கேட்க முனைந்தால் ...

  • மலையின் மேல் இருக்கும் சமணப்படுகை பற்றி...
  • மலையின் மேல் இருக்கும் சிக்கந்தர் தர்கா பற்றி...
  • மலையின் தென்புறமும் மலையைக் குடைந்து அமைக்கப்பட்ட குடைவரைச் சிவன் கோவில் பற்றி (கி.பி 2 ஆம் நூற்றாண்டு முதல் 13ம் நூற்றாண்டு வரை சமணர் கோவிலாக இருந்திருக்கிறது)
















  • இபோது இருக்கும் திருப்பரங்குன்றம் முருகன் கோவிலும் ஒருகாலத்தில் சமணர்களின் குடைவரைக் கோவிலாக இருந்திருக்குமோ என்ற அய்யங்கள் பற்றி ... (சமணர் கோவிலாக இருந்ததை அழித்து அல்லது மறைத்து ,ஒட்டுமொத்தமாக இந்துத் தெய்வங்கள் அனைத்தையும் சுவற்சிற்பமாக செதுக்கிவிட்டார்களோ என்று சந்தேகம் , கோவிலுக்குச் செல்லும் போதெல்லாம் வந்தது உண்டு.)

....என்று பல விசயங்களை ஆராயலாம்.

ஆனால் இந்தக் கட்டுரையின் நோக்கம் அதுவல்ல. மேற்சொன்னவை எல்லாம் ஆராய்ச்சிக்கான விசயங்கள். வரலாற்றின் பாதையில் கட்டுக்கதைகளை நீக்கிவிட்டு ஆராய வேண்டும்.

பக்த கோடிகள் மற்றும் வரலாற்றை அறிந்தவர்களுக்கான கேள்வி.

ஒவ்வொரு கோவிலிலும் கருவறை அல்லது மூலஸ்தானம் அல்லது சன்னிதி என்ற ஒரு தனிப்பட்ட அறை இருக்கும். இந்த அறையில்தான் அந்தக் கோவிலின் கதாநாயக கேரக்டர் இருக்கும். திருப்பரங்குன்றத்தில் அப்படி ஏதும் கிடையாது.

அநேக வீடுகளில் 5 தெய்வங்களின் ஒரே சட்டகத்தில் இருக்குமாறு ஒரு படம் இருக்கும். திருப்பரங்குன்றமும் அப்படியே. இது தனியொரு கேரக்டருக்கான கோவில் இல்லை.

(மேலே உள்ள படத்தில்,பச்சை வண்ணத்தில் காட்டப்பட்டுள்ள பாதை அப்பிராணி பக்தர்களுக்கு.நீல வண்ணத்தில் காட்டப்பட்டுள்ள பாதை 10 ரூபாய் மொய் செய்பவர்களுக்கு. நீல வண்ணப்பாதையில் சென்றால்தான் (A) மற்றும் (E) கேரக்டர்களைப் பார்க்க முடியும்)

இங்கே...
(A) பவளக்கனிவாய் பெருமாள்
(B) முருகன்
(C) துர்க்கை

(D) கற்பகவிநாயகர்

(E) அர்த்தகிரீஸ்வரர் (சிவன்)
என்று 5 தெய்வ உருவங்கள் உண்டு.


யாருக்கும் தனியாக ரூம்கள் இல்லை. மேலே சொன்ன அனைவருக்கும் ஒரே அந்தஸ்து கொடுக்கப்பட்டே சிற்பங்கள் செதுக்கப்பட்டு இருக்கும். அது அந்தக்காலம், அதாவது கோவில் சிற்பத்தை செதுக்கியவர்களின் காலத்தில்.

இப்போது முக்கியத்துவம் எல்லாம் முருகனுக்கே. அதுவும் (A) பவளக்கனிவாய் பெருமாள் மற்றும் (E) அர்த்தகிரீஸ்வரர் இருவரும் பக்தகோடிகளுக்கு நேரடிப்பார்வை அளித்துவிடாவண்ணம் அல்லது முருகனுக்கு மட்டுமேயான கூட்டத்தை ஒதுக்கி வழிவிடுவதற்காக (A) & (B) க்களை ஓரம் கட்டி இருப்பார்கள். அதற்கு சாட்சியாக இருப்பது (A) & (B) மறைத்து கட்டப்பட்டுள்ள சுவர்.மக்களை ஏமாற்றும் வண்ணம் இந்தச் சுவர் கற்களுக்கு இணையாண வண்ணம் பூசப்பட்டு இருக்கும். அதை அறிந்து கொள்ள ஆராய்ச்சிப்பார்வை எல்லாம் தேவை இல்லை. அருகில் இருந்து பார்த்தாலே தெரிந்துவிடும்.

அர்ச்சனைத் தட்டை கொடுத்தால் "எந்த கேரக்டருக்கு அர்ச்சனை?" என்று கேட்பதே இல்லை. எந்தெப் பெயருக்கு என்று கேட்டுவிட்டு நேரே முருகனுக்குப் போய்விடும். "முருகனைப் பார்க்க வரவில்லை, துர்க்கவிற்காக வந்தேன்" , என்றால் அர்ச்சகரால் நீங்கள் டேப்பராகப் பார்க்கப்பட வாய்ப்பு உண்டு. மேலும் இங்கே முருகன் என்ற ஒரு கேரக்டருக்காக கொண்டாடப்படும் விழாக்கள் போல சம அந்தஸ்தில் உள்ள மற்ற கேரக்டர்களுக்கு விழாக்கள் கொண்டாடப்படுவது இல்லை.


கேள்விகள்:

(1). 5 கேரக்டர்களுக்கான ஒரு பொதுக் கோவில் ,எப்படி ஒருவருக்கான கோவிலாக உருமாறியது?

(2.) தல புராணங்கள் எந்தக் காலத்தில் திருத்தப்பட்டது?

(3.) இது முருகனுக்கான ஆறுபடை வீடுகளில் முதல் வீடாக ஏன் கட்டமைக்கப்பட்டது ?


தகவலுக்காக:

திருப்பரங்குன்றம் - தலவரலாறு
http://sriramprasath.blogspot.com/2007/01/blog-post.html

திருமலையின் மதுரை சமணக்குகைகள் குறித்தான பதிவுகள்


மதுரை சமணக் குகைக் கோவில்கள் - ச. திருமலை
http://www.maraththadi.com/article.asp?id=2696

மதுரை சமணர் பள்ளிகள், குகைகள், சிற்பங்கள், குன்றுகள்-
தொடர்ச்சி... - ச. திருமலை

http://www.maraththadi.com/article.asp?id=2698

மதுரை சமணர் பள்ளிகள், குகைகள், சிற்பங்கள், குன்றுகள்-
தொடர்ச்சி... - ச. திருமலை

http://www.maraththadi.com/article.asp?id=2699

மேலக்குயில்குடி சமணர் குன்று, குகை, திருப்பரங்குன்றம்
சுப்ரமணிய சுவாமி திருக்கோவில், சமணர் குகைக் கோவில் மற்றும் படுக்கைகள் - ச. திருமலை

http://www.maraththadi.com/article.asp?id=2708

**

கல்லில் ஊரும் காலம் -எஸ்.ராமகிருஷ்ணன்
http://www.tamiloviam.com/atcharam/page.asp?ID=17&fldrID=1

தமிழ்நாட்டின் தொடக்கக் காலக் கலை வரலாறும் குடைவரைகளும் -மு. நளினி
http://www.varalaaru.com/Default.asp?articleid=416


Picture Courtesy:
www.madurawelcome.com
http://thiruparankundram.blogspot.com/2007/04/blog-post_06.html

Sunday, December 2, 2007

பிரிவும் சந்திப்பும்

அன்று பெரிய கார்த்திகை..திருப்பரங்குன்றமே விழாக்கோலம் பூண்டிருந்தது. ரயில் நிலையம் அருகில் இருந்த அனுமார் கோவிலிலும் கூட்டம் வழக்கத்தை விட அதிகமாக இருந்தது.கண்ணாடியைக் கழற்றித் துடைத்து மாட்டிய கோபால் கோவிலின் வேலியோரம் இரை தேடிக் கொண்டிருந்த கோழிக் குடும்பத்தை ரசித்துக் கொண்டிருந்தார்.தாய்க் கோழியும், மஞ்சள் வண்ணம், ரோஸ் வண்ணம் சாயம் பூசிய கோழிக்குஞ்சுகளும் பார்க்க அழகாயிருந்தன.'இவை எத்தனை காலம் இப்படிச் சேர்ந்திருக்கும், ஒரு நாள் பிரியத்தானே வேண்டும்' என்று நினைத்தார் கோபால்..மனிதனைப் போல இவையும் பிரிவுக்கு வருந்துமோ என்று யோசித்தார்..

வழக்கமாக காலை நேர நடைப்பயிற்சிக்கு மலையைச் சுற்றி வருவது அவர் வழக்கம்..கூடவே வரும் நடேசனும், ராசப்பாவும் அன்று வரவில்லை..நடேசனுக்கு உடம்பு சரியில்லை..ராசப்பா பெரிய பையனைப் பார்க்க சென்னைக்குப் போயிருக்கிறார். கோபாலுக்கும் 3 பையன்கள்..
மூத்தவன் அமெரிக்காவிலும், இரண்டாமவன் திருச்சியிலும் இருக்க, மனைவி, மூன்றாவது மகன்,
மருமகள் மற்றும் பேரன், பேத்தியுடன் வசித்துவந்தார். மகன் பேருந்து நிலையத்தருகில் சொந்தமாக ஒரு மருந்துக்கடைவைத்திருந்தான். சொந்த ஊரிலேயே கடைசிக் காலம் கழிக்கக் கொடுத்து வைத்திருக்க வேண்டும். அந்தக் கொடுப்பினை பெற்றவர் கோபால்.

திருப்பரங்குன்றத்தைப் பற்றிய நிறைய விஷயங்கள் குறித்து எப்போதும் மற்றவர்களிடம் பெருமையாகப் பேசி வருவார் அவர். கம்பீரமான மலை, அதன் மேல் ஒருங்கே அமைந்த காசி விஸ்வநாதர் கோவில், சிக்கந்தர் தர்கா,(மதத்துக்காக மனிதன்தான் சண்டை போடுகிறான்..தெய்வங்கள் என்னவோ தோழமையோடுதான் இருக்கின்றன),புதிதாகப் போடப்பட்ட மலைப்பாதையில் கலந்து காணப்படும் இந்து, முஸ்லிம் குடும்பங்கள், எப்போதும் கலகல என இருக்கும் வீதிகள், எல்லா மாதமும் பண்டிகை, தேர்,சந்தனக்கூடு, தெருவெல்லாம் கல்யாண மண்டபம், எல்லா முகூர்த்தத்திலும் திருமணம், ஐயப்ப சீசனில் வெளியூர்க்கூட்டம், சினிமாப் படப்பிடிப்பு, வாரம் ஒரு முறையாவது ஏதாவது ஒரு நிகழ்ச்சிக்காக மேடை போட்டு அமர்க்களப்படும் பதினாறு கால் மண்டபம் என்று ஏதாவது ஒரு சாக்கில் எப்போதும் சுறுசுறுப்பாய் இருக்கும் ஊர்.

அன்றும் அப்படித்தான் திருக்கார்த்திகைக் கூட்டம் - அந்தக் காலை நேரத்திலேயே மலை சுற்றி வருவோரின் கூட்டம் சற்று அதிகமாகஇருந்தது. மலைப்பாதை முழுவதும் திடீரென முளைத்த பல கடைகள்..கார்த்திகை மாதம் வந்ததும் நரிக்குறவர் கூட்டமும் வந்து விடும்.
அனுமார் கோவிலை ஒட்டிக் கூடாரம் போட்டு அங்கேயே தங்கிவிடுவார்கள் ஐயப்ப சீசன் முடியும் வரை. விதவிதமாக ஊசி,பாசிமணிகள், கொம்புகள், மிருக ரோமங்கள், நகங்கள் என்று அவர்கள் விற்பனை செய்யும் பொருள்கள் ஏராளம். சின்னஞ்சிறு லாபத்துக்காய் வியாபாரம் செய்து ஊர் ஊராய்ச் சுற்றித் திரியும் அவர்கள் வாழ்க்கை சவால்கள் நிறைந்தது.

ரயில் நிலையத்துக்கு எதிர்த்தாற்போல் ஆரம்ப சுகாதார நிலையம் இருந்தது. அதன் அருகே நரிக்குறவர்கள் பலர் தரையில் துணி பரப்பிப் பொருட்களை விற்பனைக்கு வைத்திருக்க, குறத்திகள் இடுப்பில் சுமந்த குழந்தையுடன் கையில் பாசிகளை ஏந்தியவாறு
தெருவில் போவோர் வருவோரிடம் வியாபாரம் செய்வார்கள்.

திடீரென்று அந்தப் பகுதியில் சலசலப்பு ஏற்பட எல்லோரும் அங்கே விரைந்தனர். கோபாலும் அங்கே போனார். சுமார் 50 வயது மதிக்கத்தக்க ஒரு பெண்மணி தரையிலமர்ந்து ஓலமிட்டி அழுது கொண்டிருந்தாள். "அய்யோ ராசா! இப்டிக் கல்லத் தூக்கிப் போடுறியே.
நா என்ன செய்வேன்?" சுற்றிலும் கவலை தோய்ந்த முகத்துடன் குறவர் கூட்டம். குத்துக்காலிட்டு இறுகிய முகத்துடன் அமர்ந்திருந்தான்ஒரு நரிக்குறவ இளைஞன். அந்த அம்மா அவனது தாயாம். சின்ன வயதில் நாமக்கல்லில் காணாமற் போனவன் பல வருடம் கழித்துத்
தன் தாயைப்பார்த்திருக்கிறான் மலை சுற்ற வந்த இடத்தில்..அடையாளம் கண்டு கொண்டு பேசியிருக்கிறான். சிறுவயதில் இந்தக் கூட்டத்தில் சேர்ந்தவன் அந்த இனத்திலேயே ஒரு பெண்ணை மணந்து குழந்தை குட்டியென்று அவர்களுடன் ஐக்கியமாகிவிட்டான்.

இப்போது அந்த அம்மா தன்னுடன் வரச் சொல்லி அவனையும், அவன் மனைவி, குழந்தைகளையும் கூப்பிடுகிறாள். அவன் மறுத்து விட்டான். அந்த அம்மாவுடன் வந்த ஒரு பெண் - மருமகள் போலும், அவளைச் சமாதானப் படுத்துகிறாள். அந்தக் குடும்பமும்
நாமக்கல்லை விட்டு வந்து தற்போது மதுரையில் வசிக்கிறார்கள்.தொலைபேசிச் செய்தி போய் அப்பா மற்றும் குடும்பத்தினரும் வந்து பேசுகின்றனர். குறவர் இன வழக்கப்படி எந்தக் குடும்பமும் பிரியக் கூடாது என்றாலும் இந்தச் சூழலில் எதுவும் பேசாமல் அந்த
நரிக்குறவர்களும் மெளனம் காத்திருந்தனர். என்றாலும் அந்த இளைஞன் சமாதானமாகவில்லை. கூடியிருந்தோரும் செய்வதறியாது நின்றார்கள்.

நீண்ட நேரம் போயும் அவன் சமாதானமாகவில்லை."புள்ள குட்டின்னு ஆய்ருச்சு சாமியோவ்...இவுகள விட்டுட்டு நா எங்க வாரது? அப்பப்ப வந்து ஒங்களப் பாக்குறேன்"னு சொல்லி முகவரி வாங்கிக் கொண்டு ஒரு வழியாகச் சமாதானப் படுத்தி அனுப்பி வைத்தான்.
அழுது கொண்டே சென்றனர் அவர்கள். "இந்தப் பிரிவும்,சந்திப்பும் வித்தியசமானது. பிரிவில் இதுவும் ஒரு ரகம்" என்றுஎண்ணமிட்டபடி கோபால் கனத்த மனத்துடன் வீடு நோக்கி நடக்கலனார்.

(பி.கு: இந்தச் சம்பவம் என் சிறிய வயதில் என் ஊரான திருப்பரங்குன்றத்தில் உண்மையிலேயே நடந்த சம்பவம்.கவிதை என்ற பெயரில் ஏதாவது எழுதியிருந்தாலும்..சிறுகதை எழுதுவது இதுதான் முதல் முறை..)