Saturday, December 15, 2007

மதுரை அழைக்கிறது...

மதுரை மாநகரம் பகுதியில் இருக்கும் பதிவுகள் அனைத்தையும் இன்றுதான் முழுமையாகப் படித்து முடித்தேன். நம் ஊர் என்றாலும் இதுவரை அறிந்திராத செய்திகள்தான் எத்தனை!
மலரும் நினனவுகள், தலபுராணம் என்று பகுதிகள் அனனத்தும் மீண்டும் நம் ஊர்ப்பக்கம் போய் வரச் செய்தன..இதைப் படித்ததும் கொஞ்சம் திருப்தி, கொஞ்சம் புரிதல், கொஞ்சம் சிந்தனை, கொஞ்சம் ஆதங்கம் எல்லாமே எழுந்தது மனதில்...இத்தனை பேர் நம் ஊர்க்காரர்கள் இருக்கிறார்களேயென்ற திருப்தி, நம் கல்லூரியில் படித்தவர்கள் இருக்கிறார்கள் என்ற மகிழ்ச்சி, ஊரைப் பற்றிக் கொஞ்சம் புரிதல், சில புதிய கேள்விகள் எழுப்பிய சிந்தனை, இன்னும் நிறையப் பதிவுகள் பலரிடமிருந்து வர வேண்டுமே என்ற ஆதங்கம்..எல்லாம் எழுந்தது.

சமீபத்தில் படித்த செய்தி..மதுரையிலிருந்து கன்னியாகுமரி, கொடைக்கானல், இராமேஸ்வரம் முதலிய இடங்களுக்கு ஹெலிகாப்டர் வசதி அறிமுகப்படுத்தப்படவிருக்கிறது என்று சுற்றுலாத்துறை அறிவித்துள்ளது.

இன்னும் 2 தினங்களில் மதுரை மண்ணிற்கு விடுமுறைக்காக 2 வாரம் வரப் போகிறேன்..இந்த முறை இன்னும் நமக்குத் தெரிந்தவர்கள் அதிகம் பேர் இருக்கிறார்கள் என்ற புது உணர்வுடன்..

இந்தக் குழுவில் இணையும் முன்னே என்னுடைய பதிவில் இடப்பட்ட 2 பகுதிகளை இங்கு உங்கள் பார்வைக்கு வைக்கிறேன்..

Tuesday, November 13, 2007
மாறி வரும் மதுரை மாநகர் - 1

சமிபத்தில் ஒரு மின்னஞ்சல் கிடைக்கப்பெற்றேன்..மகேந்திரவர்மன் என்ற நபர் அனுப்பியது அது..எப்படியோ யாஹூ குழுமத்தில் எனக்கும் வந்து சேர்ந்தது..அதில் படித்த செய்திகள் மற்றும் சமீபத்தில் ஊருக்கு நான் சென்ற போது கண்டவை கேட்டவையே இந்தப் பதிவுக்குக் காரணம்..

மதுரை ஒன்றுதான் மாறி வரும் உலகில் மாறாத நகரம் என்று என் கணவர் உட்பட அநேகர் கூறியதுண்டு..(என் கணவருக்கும் என்னைப் போல் மதுரைதான் சொந்த ஊர் என்பது வேறு விஷயம்)..அவர்களுக்கெல்லாம் பதில் கூற வேண்டிய நேரம் இப்போதுதான் கைகூடியுள்ளது..மீனாட்சியம்மன் கோவிலைச் சுற்றி அடுக்கடுக்காகத் தாமரை இதழ்களைப் போல அடுக்கி வைக்கப்பட்ட தெருக்கள்...நிறைய மாறாதிருந்த அந்தப் பகுதியில் கடந்த வருடம் முதல் தடாலடி மாற்றங்கள்...பிரம்மாண்ட கட்டடங்களை முதலில் அறிமுகம் செய்த பெருமை பல நகைக்கடைகளையே சாரும்...எத்தனையோ காரணங்கள் கூறியதுண்டு...கோவில் கோபுரத்தை விட உயர்வான கட்டடங்களைக் கட்டக்கூடாது என்பதுதான் காரணம் என்று சிலரும்...ஆழமாக அஸ்திவாரம் தோண்டுவதால் பாதாளக் கழிவு நீர்க் குழாய்கள் பாதிக்கப்படும் என்று சிலரும் பலவாறாகக் காரணங்கள் கூறினர்...அடுக்கு மாடிக் கட்டடங்கள் இல்லாவிட்டாலும் பிரம்மாண்டமான கட்டடங்கள் பல்கிப் பெருகி வருகின்றன என்பது மதுரைவாசிகளை மகிழவைக்கும் உண்மையாகும்..

இன்னும் ஏற்படவிருக்கும் மாற்றங்களும், துறைகளும்:

1.ரியல் எஸ்டேட் துறையில் அபரிமித வளர்ச்சி...போட்டா போட்டி..தகவல் தொழில் நுட்பப் பூங்காக்கள் வரப்போவதற்கான அறிவிப்பின் எதிரொலி..நாளுக்கு நாள் நிலத்தின் மதிப்பு உயருவதால் உடனே விற்பதற்கு யோசிக்கும் உரிமையாளர்கள்..

2. விரிவாக்கப்படும் விமான நிலையம் கூடிய சீக்கிரம் பன்னாட்டு விமான நிலையமாகப் போகிறது..

3. அங்கங்கே முளைக்கும் townships..பல தரப்பட்ட நவீன வசதிகளுடன்...

4.பல பகுதிகளில் அமையவிருக்கும் தொழிற்பேட்டைகள்

5. சென்னை மற்றும் கேரளா சார்ந்த பிரபல நகைக்கடைகளின் கிளைகள்

6. மதுரையின் பழம்பெரும் திரையரங்குகள் பல பிரபல் துணிக்கடைகளின் கிளைகளாக மாற உள்ளன.

7. மதுரையில் கால்பதிக்கவிருக்கும் அநேக தகவல் தொழில் நுட்ப மையங்கள் மற்றும் பூங்காக்கள்

8. உருவாகப் போகும் 3 மற்றும் 5 நட்சத்திர விடுதிகள்

9. பெருகி வரும் இலகுரக மற்றும் கனரக பிரபல மோட்டார் வாகன விற்பனை நிலையங்கள்

10.வரவிருக்கும் திரையரங்குகளுடன் கூடிய Multiplex கட்டடங்கள்

11.சுற்றிலும் கட்டுமானத்தில் இருக்கும் நான்கு வழிப் பாதையில் தேசிய நெடுஞ்சாலைகள்..

இன்னும் இன்னும் அநேக துறைகளில் மாறி வருகிறது மதுரை மாநகர்..

மதுரை தமிழ்நாட்டின் இரண்டாவது தலைநகரம் என்ற தகுதிக்குத் தயாராகிவிட்டது என்று கட்டியங்கூறும் சில தகவல்கள் அடுத்த பகுதியில்...

Posted by பாச மலர் at 4:14 AM 4 comments

Labels: மதுரை

Saturday, November 17, 2007
மாறி வரும் மதுரை மாநகர் - 2


மதுரையின் சிறப்புகள் பல அனைவரும் அறிந்ததே...தென் தமிழ்நாட்டின் தலைநகரம், தூங்கா நகரம், கிழக்குப் பகுதியின் ஏதென்ஸ், கோவில் நகரம் என்ற பல சிறப்புப் பெயர்களைப் பெற்ற நகரம்.


இரண்டாவது தலைநகரம் என்பது தேவையில்லை என்று தற்சமயம் வாதிட்டாலும், நிர்வாக சவுகரியங்களுக்காகவும், செயலாக்கத் திட்டங்களை விரிவு மற்றும் விரைவு படுத்துவதற்காகவும் என்று பல காரணங்களுக்காக இன்னொரு தலைமையகம் தேவை என்ற நிலை குறுகிய காலகட்டத்துக்குள் ஏற்படும் சாத்தியக்கூறுகள் ஏராளமாய் உள்ளன. அந்த நிலை ஏற்படும்போது மதுரை நகரின் பெயர் முன்னிலை வகிக்கும்.


இராமர் சேது முனையல், உள்மாநில, வெளிமாநில அளவில் அநேகப் பெரு நகரங்களை இலகுவாகச் சென்று சேரும் வண்ணம் புவியியல் அமைப்பு மற்றும் போதுமான போக்குவரத்து வசதிகள்,(இதனால்தானே அரசியல் முதல் சினிமா வரை அனைத்து மாநாடுகளுக்கும் மதுரை தமுக்கம் மைதானம் களமாகிறது..) கூப்பிடு தூரத்தில் கவின்மிகு சுற்றுலா மையங்கள்,வழிபாட்டுத் தலங்கள், தரமான கல்வி நிலையங்கள், மருத்துவமனைகள், உயர்நீதிமன்றக் கிளை, விரைவில் அமையவிருக்கும் மண்டலக் கடவுச் சீட்டு அலுவலகம்..சமுதாயத்தின் அடித்தட்டு மக்கள் முதல் மேல்தட்டு மக்கள் வரை அனைவரின் தேவைகளும் பூர்த்தியாக்கும் விலைவாசி நிலவரம், இன்னும் இன்னும்...


முத்தாய்ப்பாக ஒரு செய்தி...JNNURM - Jawaharlal Nehru National Urban Renewal Mission மதுரைக்கு அளிக்கவிருக்கும் பல ஆயிரம் கோடிகள் ...


மதுரைவாசி என்பதால் மட்டுமல்ல நியாயமான பல காரணங்களுக்காகவும் மதுரை மாநகர் இரண்டாவது தலைநகரமாகும் நன்னாளை ஆவலுடன்
எதிர்பார்க்கிறேன்..

- மலர்.

Posted by பாச மலர் at 4:17 AM 9 comments

Labels: மதுரை

4 Comments:

தருமி said...

"மதுரை அழைக்கிறது..."

வாருங்கள் .. வாருங்கள்..

cheena (சீனா) said...

புதிய பதிவுகள் இங்கேயும் பதிய வாழ்த்துகள் - வருக வருக

திருப்பரங்குன்றத்தில் ஒரு ஐந்தாண்டு காலம் சுற்றிஇருக்கிறேன். பொறியியல் கல்லூரி வாழ்க்கை

Geetha Sambasivam said...

"மதுரைக்குப் போகாதேடி"னு புதுசா ஒரு பாட்டு வந்திருக்காமே, அதைக் கேட்காதீங்க, நல்லாப் போய் இருந்து அனுபவிச்சுட்டு வாங்க,

பி.கு. அனுராதா அவர்களைப் பார்த்தால் எங்கள் சார்பில் அவங்க உடல் நலம் அடைய வாழ்த்துக்களைத் தெரிவிக்கவும்.

பாச மலர் / Paasa Malar said...

தருமி சார், சீனா சார், கீதா,

நன்றி..நன்றி..நன்றி..

அனுராதா அவர்களை அவசியம் சந்திப்பேன்..உங்கள் வாழ்த்துகள் அவசியம் தெரிவிக்கிறேன்.