பொற்றாமரையின் தோற்றம். படம் உதவி: ஜெயஸ்ரீ! நன்றி.
1330-ம் ஆண்டு அந்நியர் படை எடுப்பின் போது மீனாட்சி கோயில் கருவறை மூடப் பட்டது. அதன் பின்னர் கிட்டத் தட்ட நாற்பத்தி எட்டு ஆண்டுகள் மூடப் பட்டே இருந்தது கருவறை. மீனாக்ஷி அம்மன் சிலையையும், சொக்கநாதர் சிலையையும் உடைக்க முயன்ற முயற்சி தோல்வி அடைந்தது. கோயில் அறங்காவலர்கள், சிவலிங்கத்தை மூடி, அதன் மேல் கிளிக்கூண்டை நிறுவி மணலையும் பரப்பி விட்டனர். கருவறை வாசல் கல் சுவரால் மூடப் பட்டிருந்தது. அர்த்த மண்டபத்தில் வேறொரு சிலையை வைத்திருக்க அதுதான் சுந்தரேஸ்வரர் சிலை என நினைத்து அந்நியர்கள் அந்தச் சிலையை உடைத்து நொறுக்கினார்கள். அந்தச் சிலை தற்போது ஸ்வாமி சந்நதி வெளிப்பிரஹாரத்தில் வைக்கப் பட்டுள்ளது, மிகச் சிலர் மட்டுமே அறிந்திருக்கின்றனர். கிட்டத் தட்ட 48 ஆண்டுகளுக்கு மேல் மூடப் பட்டுக் கிடந்த கோயில் அதன் பின்னர் கம்பன்னன் காலத்திலே தான் அந்நியர் விரட்டப் பட்டுத் திறக்கப் பட்டது. அப்போது மூலஸ்தானக் கருவறையில் இருந்து சந்தனத்தின் மணத்தோடு, சிவலிங்கத்தின் இருபக்கமும் ஏற்றி வைக்கப் பட்டிருந்த விளக்குகளும் அணையாமல் எரிந்து கொண்டிருந்தன எனப் பதிவு செய்யப் பட்டிருக்கின்றது.
இப்போது கோயிலின் ஒவ்வொரு மண்டபமாய்ப் பார்க்கலாமா? முதலில் அஷ்ட சக்தி மண்டபம். கிழக்கு கோபுரத்தின் வழியாக வரும்போது முதலில் வரும் இந்த மண்டபம். இது முதலில் அன்னதான மண்டபமாய் இருந்து வந்திருக்கின்றது. பின்னர் கோயிலுக்கு வெளியே தெற்காவணி மூலவீதியில் சோற்றுக்கடைகள் ஏற்படுத்தப் பட்டு அன்னதானம் அங்கே நடந்தது. அந்தப் பக்கம் ஒரு தெருவே சோத்துக்கடைத் தெரு என்ற பெயரில் உண்டு. இப்போத் தெரியலை. இந்த அஷ்ட சக்தி மண்டபத்தில் இடப்பக்கம் உள்ள தூண்களில் கெளமாரி, ரெளமாரி, வைணவி, மஹாலக்ஷ்மி ஆகியோரின் சிற்பங்களும், வலப்பக்கம் உள்ள தூண்களில் யக்ஞரூபிணி, சியாமளை, மஹேஸ்வரி, மனோன்மணி ஆகியோரின் சிற்பங்களும் பல்வேறு அழகான வண்ண ஓவியங்களும், (இப்போ இருக்கா) சிலைகளும் இருந்தன. சிலைகள் கட்டாயம் இருக்கும். ஓவியங்கள் பத்தித் தெரியலை.
அடுத்து நாங்கல்லாம் யாளி மண்டபம்னு சொல்லுவோம். அந்த மண்டபத்தின் பெயர் மீனாட்சி நாயக்கர் மண்டபம் என்ற பெயராம். அஷ்ட சக்தி மண்டபத்தை அடுத்து உள்ள இந்த மண்டபத்தில் உள்ள தூண்கள் அனைத்தும் 22 அடி நீளம் கொண்டவை, 110 தூண்கள் போல் இருக்கின்றன. ஒவ்வொரு தூணிலும் யாளியின் உருவமே காணப்படும். மண்டபத்தின் மேல் விட்டத்தில் ராசி சக்கரம் இருப்பதாய்ச் சொல்கிறார்கள். பார்க்கவே இல்லையே, போகும்போது பார்க்கணும். திருமலை நாயக்கரின் அமைச்சர் ஆன மீனாக்ஷி நாயக்கர் என்பவரால் கட்டப் பட்டதாம் இந்த மண்டபம். இந்த ராசிச்சக்கரம் இருக்கும் இடத்திலே உள்ள திருவாட்சியில் தான் 1008 எண்ணெய் விளக்குகள் அமைந்திருக்கின்றன. திருவாட்சி வளைவு 25 அல்லது 30 அடி உயரம் இருக்கலாம். திருவாட்சியின் முன் மேல்பாகக் கூரையிலே தான் சதுரக் கட்டம் கட்டி ராசிச் சக்கரம் இருக்காமே. பார்க்கணும்.
முதலிப்பிள்ளை மண்டபம்: ஹிஹிஹி, வேறே ஒண்ணும் இல்லை, மதுரை மக்களே, நம்ம இருட்டு மண்டபத்தைத் தான் இப்படிச் சொல்றாங்க. 1963-ல் (அட, நாம பிறந்துட்டோமே???) கடந்தை முதலியார் என்பவரால் கட்டப் பட்டது இந்த இருட்டு மண்டபம். இங்கே பிக்ஷாடனர் சிலையும், மோகினியின் சிலையும் நல்ல அமைப்புடன் வடிவமைக்கப் பட்டிருப்பதாய்ச் சொல்லுவார்கள். பார்க்கலை, பார்க்கணும். அடுத்து
ஊஞ்சல் மண்டபம்: வெள்ளியினால் ஆன சிறு ஊஞ்சலில் அம்மையும், அப்பனும் உட்கார்ந்து ஆடிக் கொண்டிருப்பார்கள். எதிரே பொற்றாமரைக்குளத்தைப் பார்த்த வண்ணம் ஆடுவாங்க. ராணி மங்கம்மாள் இந்த ஊஞ்சல் மண்டபத்தைக் கட்டியதாய்ச் சொல்லுவார்கள். பொற்றாமரைக் கரையின் மேற்கே அமைந்துள்ளது இது.
Friday, April 17, 2009
மதுரை அரசாளும் மீனாட்சி!
Posted by Geetha Sambasivam at 4/17/2009 02:12:00 PM
Labels: கீதா சாம்பசிவம்
Subscribe to:
Post Comments (Atom)
3 Comments:
மதுரை அரசாளும் மீனாட்சி எங்கள்
மனங்களை ஆண்டு மதுரைக்கு
அழைத்துச் சென்றாள். நன்றி.
மதுரை அரசாளும் மீனாட்சி எங்கள்
மனங்களை ஆண்டு மதுரைக்கு
அழைத்துச் சென்றாள். நன்றி.
சேர்வைக்காரர் மண்டபம் லா இடிந்து போய்விட்டதா ஜீ... தற்பொழுது
Post a Comment