Wednesday, October 3, 2012

மதுரை வைகை ஆறு- சில மலரும் நினைவுகள்



கரைபுரண்ட ஆற்று வெள்ளத்தை எல்லாராலும் சந்தோஷமா பார்க்க முடியுமான்னு தெரில..ஆனால்,எங்க ஊரு வைகையில் எப்பவாது நடக்கும் இந்த அதிசயத்தை கொஞ்சம் மிரட்சியுடன்,நிறையவே லயிச்சு பார்க்கத்தான் எனக்கு ஆசை..

நான் சிறுவயதில் பார்த்த வைகை ஆறே வேறு.....

குட்டி குட்டி நீர் சுனைகள்,கரையோர அரசமர பிள்ளையார்,அதிகாலை ஆற்றங்கரையில் சலவை தொழிலாளர்களின் வேலை சுறுசுறுப்பு,நீர் குடித்து போகும் நாரை கூட்டங்கள்,பொதி சுமக்கும் கழுதைகளின் அணிவகுப்பு,ஆற்று மணலில் சிறுமிகளின் கிச்சு கிச்சு தாம்பாள விளையாட்டு, சிறுவர்களின் உற்சாக கம்மாய் மீன் வேட்டை....இப்படி பல..பல... :-)))

இப்போது ,,,என் அழகு வைகை உருக்குலைந்து...மணல் திருட்டு,சமூக விரோத செயல்களில் சிக்குண்டு ரொம்பவே பரிதாபமாய் வாடி தான் இருக்கு..:-(((
 
வைகை கரையோரம் அம்மா வீடு..என் சிறுவயது நிகழ்வுகளில் பெரும்பாலும் வைகையும் என்னுடன் கூடவே இருந்தது. சில அனுபவங்களை இப்ப நினைச்சால் கூட ரொம்பவே சிரிப்பு வரும். :-)))
என் ஆறு வயதில் பாட்டியுடன் நானும் தினம் தோறும் விடிகாலையில் வைகை கரையோர பிள்ளையார் கோவில் போறது வழக்கம். பாட்டி ஒரு குடத்தில் ஆற்று நீரை மோந்துட்டு வந்து பிள்ளையாரை குளிப்பாட்டி தீபம் ஏற்றி கும்பிடுவாங்க..பின்னாடியே நானும் ஒரு சின்ன டம்ளரில் ஆற்றில் நீர் எடுத்துட்டு வந்து பிள்ளையார் மேலே மெது மெதுவாய் ஊத்துவேன்...என்னவோ நானே சாமியை குளிப்பாட்டி விடும் சந்தோஷம்...அப்போ வைகையே உன்னை  ,பிள்ளையார்,அந்த குளிர் ,அந்த அரசமரம்,என் பாட்டி எல்லாமே ரொம்ப பிடிக்கும்...பிடிக்கும்..பிடி க்கும்...:))))
                                                              

"பாட்டியின்
குட நீரை விட-என்
பிடி நீர் 
தந்ததாம்!!
கொள்ளை அழகு!!
என் பார்வையில்
கரையோரப்
பிள்ளையார்!!! :)))"
 

அப்புறம்,என்  8 வயதில் தெருவில் கிடந்த அழுக்கு குட்டி நாயை வீட்டில் எடுத்து வந்து சீராட்டி(?) பாராட்டி(?!#@) வளர்த்த என்னிடம் இருந்து பிரித்து வைகை ஆற்றில் கொண்டு விட்ட என் குட்டி தம்பியையும்,வைகையே உன்னையும் அப்போது ஏனோ பிடிக்க வில்லை...பிடிக்க வில்லை...பிடிக்கவில்லை...:-(((
 

"ஆற்றின் 

சுடுமணலில்
அழுதுகொண்டே
நான்!-என்
நாய்க்குட்டி 
தேடி.......!

என் விழிநீர் பட்டு
 
உன் 
சலசலக்கும்
நீரோடை கூட
அமைதியானது!-நீயோ
என் புன்னகை
தேடி..........!"

வைகை மணலில் விளையாட செல்லும்போது  நான் மண்ணில் கைகளால் குவித்த மண் கோவில்களும்(?!),வீடுகளும்(@#?!) மறுநாள் வந்து பார்த்தும்,கலையாமல் இருந்த போதும்.... 

மாலை நேரத்தில், தாத்தாவுடன் கைகோர்த்து வைகை மணலில் காலாற நடக்கும்போது தட்டுப்படும் சிப்பிகளை கைநிறைய சேர்க்கும்போதும்....
 


வைகையே...உன்னை..ரொம்ப பிடிக்கும்..பிடிக்கும்...பிடிக்கும்....:-))))))
 

வைகையே..!!இப்போ எல்லாம் உனக்கு என்ன ஆச்சு? முழுக்க நீர் எல்லாம் வற்றி போயி ஏன் உருமாறி திரிகிறாய்..??சித்திரை திருவிழாவுக்கு மட்டுமே பொலிவுருகிறாய்..அப்புறம் மீண்டும் ஓட்டுக்குள் பதுங்கி கொள்கிறாய்...என்னை கொல்கிராய்??!!


வைகையே!! 
அந்தி சாயும்
அழகான தருணத்தில்
என் குழந்தையுடன்
உனைதேடி வருவேன்!!

அவனிடம்
 
சிறிது காண்பித்து விடு-நீ

பூட்டி வைத்த
என் சின்னஞ்சிறு 
காலடித்  தடங்களை...!!!!!! 

5 Comments:

திண்டுக்கல் தனபாலன் said...

நல்ல கவிதை வரிகள்...

உங்களின் ரசனை, ஆதங்கம் - இரண்டுமே பகிர்வில் தெரிகின்றது...

முடிவில் விடையில்லா நல்ல கேள்வி...

தருமி said...

//வைகையே...உன்னை..ரொம்ப பிடிக்கும்..பிடிக்கும்...பிடிக்கும்//

வைகை மண் மீது இம்புட்டு ஆசையா?!

cheena (சீனா) said...

அன்பின் ஆனந்தி - மலரும் நினைவுகள் அருமை - 1963 - 1972 - நீரோடும் வைகை - நினைத்துப் பார்த்து மகிழ்கிறேன் . கவிதையுடன் கட்டுரை நன்று - நல்வாழ்த்துகள் ஆனந்தி - நட்புடன் சீனா

Ranjith Ramadasan said...

நல்ல இடுக்கை நண்பர்களே இந்த பதிவை படித்து மகிழும் நீங்களும் இதுபோன்று Blog ஆரம்பித்து Google Adsense மூலமாக பணம் சம்பாதிக்க, தமிழில் Blogging முறையாக கற்றுக்கொண்டு தங்களது ப்ளோகை Google Search ல் முதலிடம் பிடிக்க Tech Helper Tamil ஐ பாருங்கள் Tech Helper Tamil https://www.techhelpertamil.xyz/

தருமி said...

பாவம் இந்த ரஞ்சித் தம்பி! ப்ளாக் காலம் முடிஞ்சி போச்சேன்னு கவலையில் இருக்கும் போது இப்படி ஒரு பின்னூட்டம் போட்டிருக்கிறார்! 2012ல் ஆரம்பித்தது இந்த ப்ளாக். இப்போ 2021. 12-யை திருப்பிப் போட்ட ஆண்டு. எல்லாம் முடிந்த பின் .... ப்ளாக் ஆரம்பிக்கிறது எப்படின்னு இப்போ வந்து தம்பி சொல்றார். :(